பாகவத புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
விருத்ராகரன் கதை
முன்னொரு காலத்தில் இந்திரன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். சுற்றித் தேவர்கள் மற்ற இருக்கைகளில் இருந்தனர். கந்தர்வர்கள் பாட, அப்சரஸ்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். இந்த இன்பத்தில் ஆழ்ந்து இந்திரன் தன்னை மறந்திருந்தான். அப்போது தேவகுருவான பிரகஸ்பதி உள்ளே நுழைந்தார். எல்லோரும் எழுந்து மரியாதை செலுத்தினர். இன்ப போதையில் இருந்த இந்திரன் குருவின் வரவைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆச்சார்ய பீடத்திற்கு ஏற்பட்ட இந்த அவமானத்தைத் தாங்காத பிரகஸ்பதி திரும்பிச் சென்று விட்டார். அவர் போன பிறகுதான் இந்திரனுக்குத் தான் செய்த மாபெரும் தவறு மனத்தில் பட்டது. இந்த அபச்சாரம் எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்த இந்திரன் அவரை எப்படியாவது தேடிப்பிடித்து அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று புறப்பட்டுப் போனான். இந்திரனுடைய கர்வத்திற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த பிரகஸ்பதி தன் அதீதமான ஆற்றலைப் பயன்படுத்தி மாயமாய் மறைந்து விட்டார். குருவை எங்குத் தேடியும் காணாமையால் கிலி பிடித்த இந்திரன் தன் இருக்கைக்கு வந்து விட்டான். நாட்கள் சென்றன. தேவகுரு காணாமல் போன செய்தி எங்கும் பரவிற்று. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அசுரர்கள் தேவலோகத்தின் மீது படையெடுத்து அவர்களை நையப் புடைத்து விரட்டி விட்டார்கள். அடி பொறுக்க மாட்டாத தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறை யிட்டனர். பிரம்மன், அகங்காரத்தால் வந்த இந்தக் குற்றத்திற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறிவிட்டார். தேவர்கள் தங்களுக்கு உய்கதியே இல்லை என்று அழுது வேண்ட, 'துவஷ்டா என்ற முனிவரின் மகனாகிய விசுவரூபாவையே தற்காலிக குருவாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று உபதேசம் செய்தார். தேவர்கள் விசுவரூபாவிடம் சென்று பிரம்மன் பணித்ததையும், தங்கள் வேண்டுதலையும் முன் வைத்தார்கள். விசுவரூபா அவர்களின் வேண்டுதலை ஏற்று தேவகுருவின் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. விசுவருபனின் தந்தை துவஷ்டா அசுரப் பெண்ணாகிய ஈசனாவை மணந்திருந்தார். விசுவரூபன் முனிவனாயினும், அவனுடைய சித்தி தைத்திய குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள். எனவே, இந்திரனைப் பொறுத்த மட்டில் விசுவரூபாவை முழுவதும் நம்பத் தயாரில்லை. என்றாலும் விசுவரூபாவின் வருகையால் தேவர்கள் அசுரர்களை ஜெயித்து விட்டனர். விசுவரூபாவின் உதவியால்தான் தேவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்றாலும், இந்திரன் விசுவரூபாவினை நம்பாமல் இருந்தான். . விசுவரூபாவிற்கு மூன்று தலைகள் இருந்தன. ஒரு தலை உண்ணவும், மற்றொரு தலை பருகவும் பயன்பட்டன. மூன்றாவது தலை யாகங்களில் கிடைக்கும் சோம ரசத்தைக் குடிப்பதற்கென்றே பயன்பட்டது. தேவர்கள் ஜெயித்த நிலையில் அந்த வெற்றிக்கு உதவிய விசுவரூபாவின் மூன்று தலைகளையும் இந்திரன் வெட்டி விட்டான்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 15 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இந்திரன், தேவர்கள், விசுவரூபாவின், பிரகஸ்பதி, சென்று

