கம்ப இராமாயணம் - 1. மந்திரப் படலம்
கடவுள் வாழ்த்து
|
வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும், ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்ப- கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து, கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன். |
1. மந்திரப் படலம்
தயரதன் மந்திராலோசனை மண்டபம் அடைதல்
|
மண்ணுறு முரசுஇனம் மழையின் ஆர்ப்புற, பண்ணுறு படர் சினப் பரும யானையான், கண்ணுறு கவரியின் கற்றை சுற்றுற, எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான். | 1 |
தயரதன் யாவரையும் போகச் சொல்லி தனித்திருத்தல்
|
புக்கபின், 'நிருபரும், பொரு இல் சுற்றமும், பக்கமும், பெயர்க' என, பரிவின் நீக்கினான்; ஒக்க நின்று உலகு அளித்து, யோகின் எய்திய சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான். | 2 |
தயரதன் அமைச்சர்களை வருவித்தல்
|
சந்திரற்கு உவமை செய் தரள வெண்குடை அந்தரத்தளவும் நின்று அளிக்கும் ஆணையான், இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த, தன் மந்திரக் கிழவரை, 'வருக' என்று ஏவினான். | 3 |
வசிட்டனின் வருகை
|
பூ வரு பொலன் கழல் பொரு இல் மன்னவன் காவலின் ஆணைசெய் கடவுள் ஆம் என, தேவரும், முனிவரும் உணரும், தேவர்கள் மூவரின் நால்வர் ஆம், முனி வந்து எய்தினான். | 4 |
அமைச்சர்கள் மாண்பு
|
குலம் முதல் தொன்மையும், கலையின் குப்பையும், பல முதல் கேள்வியும், பயனும், எய்தினார்; நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார்; சலம் முதல் அறுத்து, அருந் தருமம் தாங்கினார். | 5 |
|
உற்றது கொண்டு, மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்; மற்று அது வினையின் வந்தது ஆயினும், மாற்றல் ஆற்றும் பெற்றியர்; பிறப்பின் மேன்மைப் பெரியவர்; அரிய நூலும் கற்றவர்; மானம் நோக்கின், கவரிமா அனைய நீரார். | 6 |
|
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற நூல் உற நோக்கி, தெய்வம் நுனித்து, அறம் குணித்த மேலோர்; சீலமும், புகழ்க்கு வேண்டும் செய்கையும், தெரிந்துகொண்டு, பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார்; | 7 |
|
தம்முயிர்க்கு இறுதி எண்ணார்; தலைமகன் வெகுண்ட போதும், வெம்மையைத் தாங்கி, நீதி விடாதுநின்று, உரைக்கும் வீரர்; செம்மையின் திறம்பல் செல்லாத் தோற்றத்தார்; தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார்; ஒருமையே மொழியும் நீரார். | 8 |
|
நல்லவும் தீயவும் நாடி, நாயகற்கு எல்லை இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்; ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின், தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார். | 9 |
அமைச்சர்கள் வருகை
|
அறுபதினாயிரர் எனினும், ஆண்தகைக்கு உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம்; பெறல் அருஞ் சூழ்ச்சியர்; திருவின் பெட்பினர்;- மறி திரைக் கடல் என வந்து சுற்றினார். | 10 |
அமைச்சர்கள் வசிட்டனையும் மன்னரையும் வணங்குதல்
|
முறைமையின் எய்தினர் முந்தி, அந்தம் இல் அறிவனை வணங்கி, தம் அரசைக் கைதொழுது, இறையிடை வரன்முறை ஏறி, ஏற்ற சொல் துறை அறி பெருமையான் அருளும் சூடினார். | 11 |
தயரதன் தன் மனக் கருத்தை வெளியிடுதல்
|
அன்னவர், அருள் அமைந்து இருந்த ஆண்டையில், மன்னனும், அவர் முகம் மரபின் நோக்கினான்; 'உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது; என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால்! | 12 |
|
'வெய்யவன் குல முதல் வேந்தர், மேலவர், செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே, வையம் என் புயத்திடை, நுங்கள் மாட்சியால், ஐ-இரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன். | 13 |
|
'கன்னியர்க்கு அமைவரும் கற்பின், மாநிலம் தன்னை இத் தகைதர தருமம் கைதர, மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்; என்னுயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன். | 14 |
|
விரும்பிய மூப்பெனும் வீடு கண்டயான் இரும்பியல் அனந்தனும், இசைந்த யானையும் பெரும்பெயர்க் கிரிகளும் பெயர, தாங்கிய அரும்பொறை இனிச்சிறிது ஆற்ற ஆற்றலேன். | 15 |
|
'நம்குலக் குரவர்கள், நவையின் நீங்கினார் தம் குலப் புதல்வரே தரணி தாங்கப் போய், வெங் குலப் புலன் கெட, வீடு நண்ணினார்; எங்கு உலப்புறுவர், என்றுஎண்ணி, நோக்குகேன். | 16 |
|
'வெள்ளநீர் உலகினில் விண்ணில் நாகரில், தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான் கள்ளரில் கரந்துறை காமம் ஆதியாம் உள்ளுறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ? | 17 |
|
'பஞ்சிமென் தளிரடிப் பாவை கோல்கொள வெஞ்சினத்து அவுணத்தேர் பத்தும் வென்றுளேற்கு, எஞ்சலில் மனமெனும் இழுதை ஏறிய அஞ்சுதேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ? | 18 |
|
'ஒட்டிய பகைஞர்வந்து உருத்த போரிடைப் பட்டவர் அல்லரேல் பரம் ஞானம்போய்த் தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு' என விட்டவர் அல்லரேல் யாவர் வீடுளார். | 19 |
|
'இறப்பெனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் மறப்பெனும் அதனின்மேல் கேடு மற்றுண்டோ ? துறப்பெனும் தெப்பமே துணைசெய் யாவிடின் பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்க லாகுமோ? | 20 |
|
'அருஞ்சிறப்பு அமைவரும் துறவும் அவ்வழித் தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய், வரும் பெருஞ் சிறை உள எனின், பிறவி என்னும் இவ் இருஞ் சிறை கடத்தலின் இனியது யாவதோ? | 21 |
|
'இனியது போலும் இவ் அரசை எண்ணுமோ துனி வரு புலன் எனத் தொடர்ந்து தோற்கலா நனி வரும் பெரும்பகை நவையின் நீங்கிஅத் தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே? | 22 |
|
'உம்மையான் உடைமையின் உலகம் யாவையும் செம்மையின் ஓம்பிநல் லறமும் செய்தனென்; இம்மையின் உதவி, நல்லிசை நடாயநீர் அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால். | 23 |
|
'இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல் தழைத்த பேர் அருளுடைத் தவத்தின் ஆகுமேல், குழைத்தோர் அமுதுடைக் கோரம் நீக்கி, வேறு அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ? | 24 |
|
'கச்சையம் கடக் கரிக் கழுத்தின்கண் உறப் பிச்சமும் கவிகையும் பெய்யும் இன்னிழல் நிச்சயம் அன்றுஎனின் நெடிது நாளுண்ட எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ? | 25 |
|
'மைந்தரை இன்மையின் வரம்பில் காலமும் நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான் வந்தனன் இனியவன் வருந்தயான் பிழைத்து உய்ந்தனென் போவதோர் உறுதி எண்ணினேன். | 26 |
|
'"இறந்திலன் செருக்களத்து இராமன் தாதை; தான், அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும் துறந்திலன்" என்பதோர் சொல்லுண் டானபின் பிறந்திலன் என்பதில் பிறிதுண் டாகுமோ? | 27 |
|
'பெருமகன் என்வயின் பிறக்கச் சீதையாம் திருமகள் மணவினை தெரியக் கண்டயான் அருமகன் நிறைகுணத்து அவனி மாதுஎனும் ஒருமகள் மணமும்கண்டு உவப்ப உன்னினேன். | 28 |
|
'நிவப்புறு நிலனெனும் நிரம்பு நங்கையும் சிவப்புறு மலர்மிசைச் சிறந்த செல்வியும் உவப்புறு கணவனை உயிரின் எய்திய தவப்பயன் தாழ்ப்பது தருமம் அன்றரோ. | 29 |
|
'ஆதலால், இராமனுக்கு அரசை நல்கி இப் பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குறும் மாதவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் யாதுநும் கருத்து?' என இனைய கூறினான். | 30 |
தயரதன் சொல்லைக் கேட்ட அமைச்சர்களின் நிலை
|
திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும் சிந்தை புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர், ஆங்கே வெருண்டு, மன்னவன் பிரிவெனும் விம்முறு நிலையால், இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆவென இருந்தார். | 31 |
|
அன்ன ராயினும் அரசனுக்கு, அதுவலது உறுதி பின்னர் இல்லெனக் கருதியும், பெருநில வரைப்பின் மன்னும் மன்னுயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை என்ன உன்னியும், விதியது வலியினும், இசைந்தார். | 32 |
வசிட்டன் உரை
|
இருந்த மந்திரக் கிழவர்தம் எண்ணமும் மகன்பால் பரிந்த சிந்தை அம் மன்னவன் கருதிய பயனும், பொருந்து மன்னுயிர்க்கு உறுதியும், பொதுவுற நோக்கித் தெரிந்து, நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும். | 33 |
|
'நிருப! நின்குல மன்னவர் நேமிபண்டு உருட்டிப் பெருமை எய்தினர்; யாவரே இராமனைப் பெற்றார்? கருமமும் இது; கற்று உணர்ந்தோய்க்கு இனிக் கடவ தருமமும் இது; தக்கதே உரைத்தனை;- தகவோய்! | 34 |
|
'புண்ணியந்தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த அண்ணலே! இனி அருந்தவம் இயற்றவும் அடுக்கும்; வண்ண மேகலை நிலமகள், மற்று, உனைப் பிரிந்து கண் இழந்திலள் எனச் செயும், நீ தந்த கழலோன். | 35 |
|
'புறத்து, நாமொரு பொருளினிப் புகல்கின்றது எவனோ, அறத்தின் மூர்த்திவந்து அவதரித் தான் என்ப தல்லால்? பிறத்தி யாவையும் காத்தவை பின்னுறத் துடைக்கும் திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும், அத் திறலோன். | 36 |
|
'பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவியெனும் திருவும் "இன்னுயிர்த்துணை இவன்" என நினைக்கின்ற இராமன் "தன் உயிர்க்கு" என்கை புல்லிது; தற்பயந்து எடுத்த உன்னுயிர்க்கென நல்லன், மன்னுயிர்க்கெலாம் உரவோய்! | 37 |
|
வாரம் என் இனிப் பகர்வது? வைகலும் அனையான் பேரினால்வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால், வீர! நின்குல மைந்தனை வேதியர் முதலோர் யாரும் "யாம்செய்த நல்லறப் பயன்" என இருப்பார். | 38 |
|
'மண்ணினும் நல்லள்; மலர்மகள், கலைமகள், கலையூர் பெண்ணினும் நல்லள்; பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்- கண்ணினும் நல்லன்; கற்றவர், கற்றிலா தவரும், உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே உவப்பார். | 39 |
|
'மனிதர், வானவர், மற்றுளோர், அற்றம்காத்து அளிப்பார் இனிய மன்னுயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை; அனையது ஆதலின், அரச! நிற்கு உறு பொருள் அறியின், புனித மாதவம் அல்லது ஒன்று இல்' எனப் புகன்றான். | 40 |
வசிட்டனின் உரை கேட்டு தயரதன் மகிழ்ந்துரைத்தல்
|
மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும், மகனைப் பெற்ற அன்றினும், பிஞ்ஞகன் பிடிக்கும் அப் பெருவில் இற்ற அன்றினும், எறிமழு வாள் அவன் இழுக்கம் உற்ற அன்றினும், பெரியதோர் உவகையன் ஆனான். | 41 |
|
அனையது ஆகிய உவகையன், கண்கள்நீர் அரும்ப, முனிவன் மா மலர்ப் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி, 'இனிய சொல்லினை; எம்பெரு மான் அருள் அன்றோ, தனியன் நானிலம் தாங்கியது; அவற்கு இது தகாதோ? | 42 |
|
'எந்தை! நீ உவந்து இதம்சொல எங்குலத்து அரசர் அந்தம் இல் அரும் பெரும்புகழ் அவனியில் நிறுவி முந்து வேள்வியும் முடித்துத்தம் இருவினை முடித்தார் வந்தது அவ்வருள் எனக்கும் என்று உரைசெய்து மகிழ்ந்தான். | 43 |
அமைச்சர்களின் கருத்தை சுமந்திரன் கூறுதல்
|
பழுதில் மாதவன், பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான் முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர்தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதம் இறைமகற்கு ஏற்கத் தொழுத கையினன், சுமந்திரன் முன்னின்று சொல்லும். | 44 |
|
'"உறத்தகும் அரசு இராமற்கு" என்று உவக்கின்ற மனத்தைத் "துறத்தி நீ" எனும் சொல்சுடும் நின்குலத் தொல்லோர் மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கன்று அறத்தின் ஊங்குஇனிக் கொடிதுஎனல் ஆவதுஒன்று யாதோ. | 45 |
|
'புரசை மாக்கரி நிருபர்க்கும், புரத்து உறைவோர்க்கும், உரைசெய் மந்திரக் கிழவர்க்கும், முனிவர்க்கும், உள்ளம் முரசம் ஆர்ப்ப, நின் முதல்மணிப் புதல்வனை, முறையால் அரசனாக்கிப்பின் அப்புறத்து அடுத்தது புரிவாய்!' | 46 |
தயரதன் இராமனை அழைத்துவரக் கூற சுமந்திரன் செல்லுதல்
|
என்ற வாசகம், சுமந்திரன் இயம்பலும், இறைவன், "நன்று சொல்லினை; நம்பியை நளி முடி சூட்டி நின்று, நின்றது செய்வது; விரைவினில் நீயே சென்று, கொண்டுஅணை, திருமகள் கொழுநனை" என்றான். | 47 |
சுமந்திரன் இராமனைத் திருமனையில் கண்டு செய்தி தெரிவித்தல்
|
அலங்கல் மன்னனை, அடிதொழுது அவன்மனம் அனையான், விலங்கல் மாளிகை வீதியின் விரைவொடு சென்றான், தலங்கள் யாவையும் பெற்றனன் ஆம் எனத் தளிர்ப்பான் பொலங்கொள் தேரொடும் இராகவன் திருமனை புக்கான். | 48 |
|
பெண்ணின் இன்னமுது அன்னவள் தன்னொடும், பிரியா வண்ண வெஞ்சிலைக் குரிசிலும் மருங்கினி திருப்ப அண்ணல் ஆண்டிருந் தான்; அழகு அருநறவு எனத்தன் கண்ணும் உள்ளமும் வண்டெனக் களிப்புறக் கண்டான். | 49 |
தந்தையின் கட்டளை கேட்டு இராமன் தேர் ஏறுதல்
|
கண்டு, கைதொழுது, 'ஐய, இக் கடலிடைக் கிழவோன், "உண்டு ஒர் காரியம்; வருக!" என, உரைத்தனன்' எனலும், புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து, ஓர் கொண்டல்போல் அவன், கொடி நெடுந் தேர்மிசைக் கொண்டான் | 50 |
இராமன் தேர்மீது செல்லுதல்
|
முறையின் மொய்ம்முகில் எனமுரசு ஆர்த்திட, மடவார் இறைகழன்று சங்கார்ந்திட, இமையவர், 'எங்கள் குறைமுடிந்தது' என்று ஆர்த்திடக் குஞ்சியைச் சூழ்ந்த நறை அலங்கல்வண்டு ஆர்த்திடத் தேர்மிசை நடந்தான். | 51 |
இராமன் தேரில் செல்வதைக் கண்ட பெண்களின் நிலை
|
பணை நிரந்தன; பாட்டு ஒலி நிரந்தன; அனங்கன் கணை நிரந்தன; நாண் ஒலி கறங்கின; நிறைப்பேர் அணை நிரந்தன, அறிவு எனும் பெரும் புனல்; அனையார், பிணை நிரந்தெனப் பரந்தனர்; நாணமும் பிரிந்தார். | 52 |
|
நீள் எழுத் தொடர் வாயிலில், குழையொடு நிகிழ்ந்த ஆளகத்தினோடு அரமியத் தலத்தினும் அலர்ந்த; வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க, சாளரத்தினும் பூத்தன, தாமரை மலர்கள். | 53 |
|
மண்டலம் தரு மதி கெழு, மழை முகில் அனைய, அண்டர் நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல், தொண்டை வாய்ச்சியர் நிறையொடும், நாணொடும், தொடர்ந்த கெண்டையும் உள; கிளை பயில் வண்டொடும் கிடந்த. | 54 |
|
சரிந்த பூவுள, மழையொடு கலை உறத் தாழ்வ; பரிந்த பூவுள, பனிக் கடை முத்துஇனம் படைப்ப; எரிந்த பூவுள, இள முலை இழை இடை நுழைய; விரிந்த பூவுள, மீனுடை வானின்றும் வீழ்வ. | 55 |
|
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம் தள்ளுறச் சுமந்து, எழுதரும் தமனியக் கொம்பில்,- புள்ளி நுண் பனி பொடிப்பன, பொன்னிடைப் பொதிந்த, எள்ளுடைப் பொரி விரவின, -உள சில இளநீர். | 56 |
இராமன் தம்பியோடு தயரதன் இருந்த இடத்தை அடைதல்
|
ஆயது, அவ்வழி நிகழ்தர, ஆடவர் எல்லாம் தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப, தூய தம்பியும், தானும், அச் சுமந்திரன் தேர்மேல் போய், அகம் குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான். | 57 |
தயரதன் இராமனைத் தழுவுதல்
|
மாதவன் தனை வரன்முறை வணங்கி, வாள் உழவன் பாத பங்கயம் பணிந்தனன்; பணிதலும், அனையான், காதல் பொங்கிட, கண் பனி உகுத்திட, கனி வாய்ச் சீதை கொண்கனைத் திரு உறை மார்பகம் சேர்த்தான். | 58 |
|
'நலம் கொள் மைந்தனைத் தழுவினன்' என்பது என்? நளிநீர் நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான், விலங்கல் அன்ன திண் தோளையும், மெய்த் திரு இருக்கும் அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான் | 59 |
தயரதன் இராமனிடம் தன் உளக் கருத்தைக் கூறுதல்
|
ஆண்டு, தன் மருங்கு இரீஇ, உவந்து, அன்புற நோக்கி, 'பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக நீந்த தோள் ஐய! நிற் பயந்தெடுத்த யான், நின்னை வேண்டி, எய்திட விழைவது ஒன்று உளது' என, விளம்பும். | 60 |
|
'ஐய! சாலவும் அலசினென்; அரும்பெரு மூப்பும் மெய்யது ஆயது; வியல் இடப் பெரும் பரம் விசித்த தொய்யல் மா நிலச் சுமை உறு சிறை துறந்து, இனி யான் உய்யல் ஆவது ஓர் நெறி புக, உதவிட வேண்டும். | 61 |
|
'"உரிமை மைந்தரைப் பெறுகின்றது, உறுதுயர் நீங்கி, இருமையும் பெறற்கு" என்பது பெரியவர் இயற்கை; தருமம் அன்ன நின் -தந்த யான், தளர்வது தகவோ? கருமம் என்வயின் செய்யின், என் கட்டுரை கோடி. | 62 |
|
'மைந்த! நம் குல மரபினில் மணி முடி வேந்தர், தம் தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க, ஐந்தொடு ஆகிய முப் பகை மருங்கு அற அகற்றி, உய்ந்து போயினர்; ஊழி நின்று எண்ணினும் உலவார். | 63 |
|
'முன்னை ஊழ்வினைப் பயத்தினும், முற்றிய வேள்விப் பின்னை எய்திய நலத்தினும், அரிதினின் பெற்றேன்; இன்னம், யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால், நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ? | 64 |
|
'ஒருத்தலைப் பரத்து ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி எருத்தின், ஈங்கு நின்று, இயல்வரக் குழைந்து, இடர் உழக்கும் வருத்தம் நீங்கி, அவ் வரம்பு அறு திருவினை மருவும் அருந்தி உண்டு, எனக்கு; ஐய! ஈது அருளிடவேண்டும். | 65 |
|
'ஆளும் நன்னெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக நாளும் நம்குல நாயகன் நறைவிரி கமலத் தாளின் நல்கிய கங்கையைத் தந்துதந் தையரை மீள்வில் இலா உலகு ஏற்றினான் ஒருமகன் மேனாள். | 66 |
|
'மன்னர் வானவர் அல்லர்; மேல் வானவர்க்கு அரசாம் பொன்னின் வார்கழல் புரந்தரன் போலியர் அல்லர்; பின்னும், மாதவம் தொடங்கிநோன்பு இழைத்தவர் பிறரார் சொல்ம றாமகன் பெற்றவர் அருந்துயர் துறந்தார். | 67 |
|
'அனையது ஆதலின், "அருந்துயர் பெரும்பரம் அரசன் வினையின் என்வயின் வைத்தனன்" எனக்கொளல் வேண்டா புனையும் மாமுடி புனைந்திந்த நல்லறம் புரக்க நினையல் வேண்டும் யான் நின்வயிற் பெறுவதுஈது என்றான். | 68 |
தயரதன் கட்டளையை ஏற்று இராமன் முடிசூடிக் கொள்ள இசைதல்
|
தாதை அப் பரிசு உரைசெய, தாமரைக் கண்ணன் காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்; 'கடன் இது' என்று உணர்ந்தும், 'யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ, நீதி எற்கு?' என நினைந்தும், அப் பணி தலைநின்றான். | 69 |
இராமன் உடன்பட்டதை அறிந்து தயரதன் மகிழ்ந்து, தன் அரண்மனை போதல்
|
குருசில் சிந்தையை மனக்கொண்ட கொற்ற வெண்குடையான், 'தருதி இவ் வரம்' எனச் சொலி, உயிர் உறத் தழுவி, சுருதி அன்ன தன் மந்திரச் சுற்றமும் சுற்ற, பொரு இல் மேருவும் பொரு அருங் கோயில் போய்ப் புக்கான். | 70 |
இராமன் தன் அரண்மனை அடைதல்
|
நிவந்த அந்தணர் நெடுந்தகை மன்னவர் நகரத்து உவந்த மைந்தர்கள், மடந்தையர், உழைஉழை தொடரச் சுமந்திரன் தடந் தேர்மிசை, சுந்தரத் திரள் தோள் அமைந்த மைந்தனும், தன் நெடுங் கோயில் சென்று அடைந்தான் | 71 |
தயரதன் மன்னர்களுக்கு செய்தி தெரிவிக்குமாறு ஓலை போக்குதல்
|
வென்றி வேந்தரை 'வருக' என உவணம் வீற்றிருந்த பொன் திணிந்த தோட்டு அரும் பெறல் இலச்சினை போக்கி, 'நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு, நல்லோய்! சென்று, வேண்டுவ வரன்முறை அமைக்க' எனச் செப்ப, | 72 |
வந்திருந்த மன்னர்களிடம் இராமனுக்கு முடிபுனைவிக்கக் இருப்பதை தயரதன் தெரிவித்தல்
|
உரிய மாதவன் ஒள்ளிதென்று உவந்தனன், விரைந்தோர் பொருவில் தேர்மிசை அந்தணர் குழாத்தொடும் போக- 'நிருபர்! கேண்மின்கள் இராமற்கு நெறிமுறை மையினால் திருவும் பூமியும் சிந்தையில் சிறந்தன' என்றான். | 73 |
தயரதன் கூறியதைக் கேட்ட மன்னர்கள் மகிழ்து தம் கருத்தை தெரிவித்தல்
|
இறைவன் சொல்லெனும் இன் நறவு அருந்தினர் யாரும், முறையில் நின்றிலர்; முந்துறு களியிடை மூழ்கி, நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர, உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார். | 74 |
|
ஒத்த சிந்தையர் உவகையின்; ஒருவரின் ஒருவர் தத்தமக்கு உற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர்; முத்த வெண்குடை மன்னனை முறை முறை தொழுதார்; 'அத்த! நன்று' என, அன்பினோடு அறிவிப்பது ஆனார். | 75 |
|
'மூவெழு முறைமை எம் குலங்கள் முற்றுறப் பூவெழு மழுவினால் பொருது போக்கிய சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு ஆவ இவ்வுலகம்; இஃது அறன்' என்றார் அரோ. | 76 |
மன்னர்களின் கருத்தை மீண்டும் அறிய தயரதன் வினவுதல்
|
வேறிலா மன்னரும் விரும்பி, இன்னது கூறினார்; அது மனம் கொண்ட கொற்றவன், ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான், மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான். | 77 |
|
'மகன்வயின் அன்பினால் மயங்கி, யான் இது புகல, நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம், உகவையின் மொழிந்ததோ? உள்ளம் நோக்கியோ? தகவு என நினைந்தது எத் தன்மையால்?' என்றான். | 78 |
இராமனுக்கு முடிசூட்ட இயைந்ததற்கான காரணத்தை மன்னர்கள் இயம்புதல்
|
இவ்வகை உரைசெய இருந்த வேந்துஅவை, 'செவ்வியோய்! நின் திருமகற்குத் தேயத்தோர் அவ்வவர்க்கு, அவ்வவர் ஆற்ற ஆற்றும் எவ்வம் இல் அன்பினை, இனிது கேள்' எனா, | 79 |
|
தானமும், தருமமும், தகவும், தன்மைசேர் ஞானமும், நல்லவர்ப் பேணும் நன்மையும், மானவ! எவையும் நின் மகற்கு வைகலும் ஈனமில் செல்வம் வந்து இயைக என்னவே. | 80 |
|
'ஊருணி நிறையவும், உதவும் மாடுயர் பார்கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும் கார் மழை பொழியவும் கழனி பாய்நதி வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்? | 81 |
|
'பனை அவாம் நெடுங்கரப் பரும யானையாய்! நினையவாம் தன்மையை நிமிர்ந்த மன்னுயிர்க்கு, எனையவாறு அன்பினன் இராமன், ஈண்டு அவற்கு அனையவாறு அன்பின அவையும்' என்றனர். | 82 |
மன்னர்கள் கூறியதைக் கேட்டு தயரதன் மகிழ்ந்துரைத்தல்
|
மொழிந்தது கேட்டலும், மொய்த்து நெஞ்சினைப் பொழிந்த பேர் உவகையன், பொங்கு காதலன், 'கழிந்தது ஓர் இடரினன்' எனக் களிக்கும் சிந்தையன், வழிந்த கண்ணீரினன், மன்னன் கூறுவான்: | 83 |
தயரதன் இராமனை மன்னர்க்கு அடைக்கலம் எனல்
|
'செம்மையின், தருமத்தின், செயலின், தீங்கின்பால் வெம்மையின் ஒழுக்கத்தின், மேன்மை மேவினீர், என்மகன் என்பதுஎன்? நெறியின், ஈங்கு, இவன் நும் மகன்; கையடை; நோக்கும் ஈங்கு' என்றான். | 84 |
தயரதன் முடிசூட்டு விழாவிற்கு நல்ல நாள் பார்த்தல்
|
அரசவை விடுத்தபின், ஆணை மன்னவன், புரை தபு நாளொடு பொழுது நோக்குவான் உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு, ஒரு வரை பொரு மண்டபம் மருங்கு போயினான். | 85 |
மிகைப் பாடல்கள்
|
'மன்னனே! அவனியை மகனுக்கு ஈந்துநீ பன்னரும் தவம்புரி பருவம் ஈது' எனக் கன்ன மூலத்தினில் கழற வந்தென மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர் |
|
தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான் ஆங்கொரு நரையது ஆய் அணுகிற் றாம் எனப் பாங்கில்வந்து இடுநரை படிமக் கண்ணாடி ஆங்கதில் கண்டனன் அவனி காவலன். [இவ் இரு பாடல்களும் முதல் பாடலின் முன் படலத்தின் துவக்கத்தில் உள்ளன] |
|
எய்திய முனிவரன் இணைகொள் தாமரை செய்ய பூங் கழலவன் சென்னி சேர்ந்த பின், 'வையகத்து அரசரும் மதி வல்லாளரும் வெய்தினில் வருக' என மேயினான் அரோ. | 4-1 |
|
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைவினன் ஆகி, நாளும் நல் தவம் புரிந்து, நல் நளிர் மதிச் சடையோன் தாளில் பூசையின் கங்கையைத் தந்து, தந்தையரை மீள்வு இல் இன் உலகு ஏற்றினன் ஒரு மகன், மேல்நாள். | 66-1 |
|
'நறைக் குழற் சீதையும், ஞால நங்கையும், மறுத்தும், இங்கு ஒருவற்கு மணத்தின்பாலரோ- கறுத்த மா மிடறுடைக் கடவுள் கால வில் இறுத்தவற்கு அன்றி?' என்று இரட்டர் கூறினார். | 76-1 |
|
'ஏத்த வந்து உலகு எலாம் ஈன்ற வேந்தனைப் பூத்தவன் அல்லனேல், புனித வேள்வியைக் காத்தவன் உலகினைக் காத்தல் நன்று' என, வேத்தவை வியப்புற, விதர்ப்பர் கூறினார். | 76-2 |
|
'பெருமையால் உலகினைப் பின்னும் முன்னும் நின்று உரிமையோடு ஓம்புதற்கு உரிமை பூண்ட அத் தருமமே தாங்கலில் தக்கது; ஈண்டு ஒரு கருமம் வேறு இலது' எனக் கலிங்கர் கூறினார். | 76-3 |
|
'கேடு அகல் படியினைக் கெடுத்து, கேடு இலாத் தாடைகை வலிக்கு ஒரு சரம் அன்று ஏவிய ஆடக வில்லிக்கே ஆக, பார்!' எனாத் தோடு அவிழ் மலர் முடித் துருக்கர் சொல்லினர். | 76-4 |
|
'கற்ற நான்மறையவர் கண்ணை, மன்னுயிர் பெற்ற தாய் என அருள் பிறக்கும் வாரியை, உற்றதேல் உலகினில் உறுதி யாது?' என, கொற்றவேல் கனை கழல் குருக்கள் கூறினார். | 76-5 |
|
'வாய் நனி புரந்த மா மனுவின் நூல் முறைத் தாய் நனி புரந்தனை, தரும வேலினாய்! நீ நனி புரத்தலின் நெடிது காலம் நின் சேய் நனி புரக்க!' எனத் தெலுங்கர் கூறினார். | 76-6 |
|
'வையமும் வானமும் மதியும் ஞாயிறும் எய்திய எய்துப; திகழும் யாண்டு எலாம், நெய் தவழ் வேலினாய்! நிற்கும் வாசகம்; செய் தவம் பெரிது!' எனச் சேரர் கூறினார். | 76-7 |
|
'பேர் இசை பெற்றனை; பெறாதது என், இனி? சீரியது எண்ணினை; செப்புகின்றது என்? ஆரிய! நம் குடிக்கு அதிப! நீயும் ஒர் சூரியன் ஆம்' எனச் சோழர் சொல்லினார். | 76-8 |
|
ஒன்றிய உவகையர்; ஒருங்கு சிந்தையர் தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும், 'என்றும் நின் புகழொடு தருமம் ஏமுற, நின்றது நிலை' என நினைந்து கூறினார். | 76-9 |
|
'வாள் தொழில் உழவ! நீ உலகை வைகலும் ஊட்டினை அருள் அமுது; உரிமை மைந்தனைப் பூட்டினை ஆதலின், பொரு இல் நல் நெறி காட்டினை; நன்று' எனக் கங்கர் கூறினர். | 76-10 |
|
'தொழு கழல் வேந்த! நின் தொல் குலத்துளோர் முழு முதல் இழித்தகை முறைமை ஆக்கி, ஈண்டு எழு முகில் வண்ணனுக்கு அளித்த இச் செல்வம் விழுமிது, பெரிது!' என மிலேச்சர் கூறினார். | 76-11 |
|
'கொங்கு அலர் நறு விரைக் கோதை மோலியாய்! சங்க நீர் உலகத்துள், தவத்தின் தன்மையால், அங்கணன் அரசு செய்தருளும் ஆயிடின்' - சிங்களர்-'இங்கு இதில் சிறந்தது இல்' என்றார். | 76-12 |
|
ஆதியும் மனுவும் நின் அரிய மைந்தற்குப் பாதியும் ஆகிலன்; பரிந்து வாழ்த்தும் நல் வேதியர் தவப் பயன் விளைந்ததாம்' என, சேதியர் சிந்தனை தெரியச் செப்பினார். | 76-13 |
|
'அளம் படு குரை கடல் அகழி ஏழுடை வளம் படு நெடு நில மன்னர் மன்னனே! உளம் படிந்து உயிர் எலாம் உவப்பது ஓர் பொருள் விளம்பினை பெரிது!' என விராடர் கூறினார். | 76-14 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1. மந்திரப் படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - தயரதன், இராமன், கூறினார், சுமந்திரன், நின்று, மன்னுயிர்க்கு, என்றான், தருமம், எய்திய, வாசகம், இருந்த, கருத்தை, நிரந்தன, மன்னவன், யாவையும், மந்திரக், அமைவரும், உவகையன், அன்றினும், மாதவன், சென்று, புக்கான், மருங்கு, மன்னர்கள், பெரிது, பெரும், தேர்மிசை, அலங்கல், கேட்டு, தெரிவித்தல், இராமனுக்கு, செம்மையின், எய்தினர், வரன்முறை, வேண்டும், நீரார், அடைதல், அமைச்சர்கள், கொண்டு, அல்லரேல், செல்வம், அனையான், நல்லள், அனையது, வைகலும், மாதவம், என்வயின், கடவுள், ஆதலின்

