இலக்கணச் சுருக்கம்

இடம்
179. இவ்விரு திணையாகிய ஐம்பாற்பொருளை உணர்த்துஞ் சொற்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும் மூவிடத்தையும் பற்றி வரும்.
---
180. பேசும் பொருள் தன்மையிடம்: பேசும் பொருளினால் எதிர்முகமாக்கப்பட்டுக் கேட்கும் பொருள் முன்னிலையிடம்: பேசப்படும் பொருள் படர்க்கையிடம்.
- தேர்வு வினாக்கள்
179. இவ்விரு திணையாகிய ஐம்பாற் பொருளை உணர்த்துஞ் சொற்கள் எவ்விடத்தைப் பற்றி வரும்?
180. தன்மையிடம் எது? முன்னிலையிடம் எது? தன்மையிடம் எது?
படர்க்கையிடம் எது?
சொற்களின் வகை
181. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும்.
- தேர்வு வினா
181. சொற்கள் எத்தனை வகைப்படும்?
பெயர்ச் சொற்களின் வகை
182. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும்.
பொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பண்புத் தொழிலும் பொருளெனவும் படுமாதலின், அவைகளை உயர்த்துஞ் சொல்லும் பெயர்ச் சொல்லெனப்படும். பொருளினது புடைப் பெயர்ச்சி யெனப்படும் வினை நிகழ்ச்சியை உணர்த்துஞ் சொல்லாகிய வினைச் சொல்லும், பெயர்த்தன்மைப்பட்டு, அப்பொருளை உணர்த்தும். இங்ஙனமாகவே, பெயர்களனைத்தும், பொரட்பெயர், வினையாலணையும் பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் நால்வகையுள் அடங்கும்.
183. பெயர்ச் சொற்கள், இடுகுறிப் பெயர், காரணப்பெயர், காரணவிடுகுறிப் பெயர் என, மூவகைப்படும்.
184. இடுகுறிப் பெயராவது, ஒரு காரணமும் பற்றாது பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம்.
உதாரணம். மரம், மலை, கடல், சோறு
இவை ஒரு காரணமும் பற்றாது வந்தமையால், இடு கறிப் பெயராயின.
185. காரணப்பெயராவது, யாதேனும் ஒரு காரணம் பற்றிப் பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம்.
உதாரணம்.
பறவை, அணி, பொன்னன், கணக்கன்
பறப்பதாதலிற் பறவை எனவும், அணியப்படுவதாதலின் அணி எனவும், பொன்னையுடையனாதலிற் பொன்னன் எனவும், கணக்கெழுதுவோனாதலிற் கணக்கன் எனவும் காரணம் பற்றி வந்தமையால், இவை காரணப் பெயராயின.
186. காரணவிடுகுறிப் பெயராவது, காரணங் கருதிய பொழுது அக்காரணத்தையுடைய பல பொருள்களுக்குஞ் செல்வதாயும், காரணங் கருதாத பொழுது இடுகுறிகளவாய் நின்று ஒவ்வொரு பொருட்கே செல்வதாயும், உள்ள பெயராம்.
உதாரணம்.
முக்கணன், அந்தனன், முள்ளி, கறங்கு
முக்கணன் என்பது, காரணங் கருதிய பொழுது விநாயகக் கடவுள் முதலிய பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத பொழுது இடுகுறியாளவாய்ச் சிவபெருமானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
அந்தணன் என்பது, காரணங்கருதிய பொழுது அழகிய தண்ணளியையுடையயோர் பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்ப் பார்ப்பானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
முள்ளி என்பது, காரணங்கருதிய பொழுது முள்ளையுடைய செடிகள் பலவற்றிற்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய் முள்ளி என்னும் ஒரு செடிக்கு செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
கறங்கு என்பது, காரணங்கருதிய பொழுது சுழலையுடை பல பொருள்கட்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்க் காற்றாடி என்னும் ஒரு பொருட்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
187. இப்பெயர்கள், பொதுப்பெயர், சிறப்புப்nபெயர் என இரு வகைப்படும்.
188. பொதுப்பெயராவது, பல பொருள்களுக்குப் பொதுவாகி வரும் பெயராம்
உதாரணம்.
மரம், விலங்கு, பறவை
இவற்றுள், மரம் இடுகுறிப் பொதுப்பெயர்: விலங்கு பறவை என்பன காரணப்பொதுப் பெயர்.
189. சிறப்புப் பெயராவது, ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாகி வரும் பெயராம்.
உதாரணம்.
ஆல், கரி, காரி
இவற்றுல் ஆல் இடு குறிப் பெயர்: கரி, காரி என்பன காரணச் சிறப்புப் பெயர். கரி- யானை, காரி - கரிக்குருவி.
190. பெயர்கள், இடவேற்றுமையினாலே, தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், என மூவகைப்படும்.
- தேர்வு வினாக்கள்
182. பெயர்ச் சொல்லாவது யாது? பெயர்கள் அனைத்தும் எத்தனை வகைப்படும்?
184. இடு குறிப்பெயராவது யாது?
185. காரணப்பெயராவது யாது?
186. காரணவிடுகுறிப் பெயராவது யாது?
187. இப்பெயர்கள் மீட்டு எத்தனை வகைப்படும்?
188. பொதுப்பெயராவது யாது?
189. சிறப்புப் பெயராவது யாது?
190. பெயர்கள் இட வேற்றுமையினால் எத்தனை வகைப்படும்?
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

