திருப்புகழ் - பாடல் 976 - திருக்குற்றாலம்
ராகம் - . ரஞ்சனி
தாளம் - தி.ர த்ருபுடை
|
தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன ...... தனதான |
|
வேதத்திற் கேள்வி யிலாதது போதத்திற் காண வொணாதது வீசத்திற் றூர மிலாதது ...... கதியாளர் வீதித்துத் தேடரி தானது ஆதித்தற் காய வொணாதது வேகத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம் வாதத்துக் கேயவி யாதது காதத்திற் பூவிய லானது வாசத்திற் பேரொளி யானது ...... மதமூறு மாயத்திற் காய மதாசல தீதர்க்குத் தூரம தாகிய வாழ்வைச்சற் காரம தாஇனி ...... யருள்வாயே காதத்திற் காயம தாகும தீதித்தித் தீதிது தீதென காதற்பட் டோதியு மேவிடு ...... கதிகாணார் காணப்பட் டேகொடு நோய்கொடு வாதைப்பட் டேமதி தீதக லாமற்கெட் டேதடு மாறிட ...... அடுவோனே கோதைப்பித் தாயொரு வேடுவ ரூபைப்பெற் றேவன வேடுவர் கூடத்துக் கேகுடி யாய்வரு ...... முருகோனே கோதிற்பத் தாரொடு மாதவ சீலச்சித் தாதியர் சூழ்தரு கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே. |
வேதங்களினால் ஆராயப் படாதது அது. அறிவு கொண்டு காண முடியாதது அது. ஒரு மாகாணி அளவு கூட (பதினாறில் ஒரு பங்கு அங்குலம்) நம்மிடத்தினின்று தூரம் இல்லாதது அது. நற்கதியை வேண்டுவோர் பகுத்தறிவோடு தேட அரிதானது அது. சூரியனால் சுட்டுப் பொசுக்க இயலாதது அது. காட்டுத்தீயின் கடுமை கொண்ட நெருப்பிலும் வேகாதது அது. கடுங்காற்றினாலும் தன் ஒளி குன்றாதது அது. காத தூரம் (10 மைல் அளவு) சென்றாலும் நறுமணம் வீசும் மலரின் தன்மையானது அது. பெரிய ஜோதியாக விளங்குவது அது. ஆணவ மதம் ஊறுகின்ற மாயம் பொருந்திய உடலில் அகந்தை என்ற மதநீர் உள்ள தீயவர்களுக்கு எட்ட முடியாத தூரத்தில் உள்ளது அது. (இத்தனைச் சிறப்புப் பெற்ற) அத்தகைய பெருவாழ்வை (முக்தி நிலையை) என்னை ஒரு பொருட்டாக மதித்து இனி அருள்வாயாக. கொலைத்தொழிலில் மிகவும் ஈடுபட்ட மதியைத் திருத்தி, இது தீய செயல், இது தீய செயல் என்று அன்பு மேலிட்டுப் பலமுறை நீ ஓதியும் நற்கதியை அடையும் வழியைக் காணாதவர்களை (அசுரர்களை) கண்ணெதிரிலேயே தெரியும் பொல்லா நோயால் அவர்கள் வேதனைப்பட்டும் கூட கெட்ட புத்தி நீங்காமல் கேடுற்று அந்த அசுரர்கள் தடுமாற, பின்னர் அவர்களை அழிப்போனே, வள்ளி என்ற பெண்மேல் காதல் பித்து மேலிட ஒரு வேடனின் உருவத்தைத் தாங்கி, காட்டு வேடுவர்களின் வீட்டுக்கே குடியாகவந்த முருகனே, குற்றமற்ற பக்தர்களுடன், சிறந்த தவ ஒழுக்கம் வாய்ந்த சித்தர் முதலானோர் வந்து வலம்வரும் அழகிய திருக்குற்றாலத் தலத்தில்* உலாவும் பெருமாளே.
* திருக்குற்றாலம் தென்காசிக்கு மேற்கே 4 மைலில் உள்ளது.நடராஜ மூர்த்தி நடனம் ஆடிய ஐந்து சபைகளில் சித்ர சபை இங்குள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 974 | 975 | 976 | 977 | 978 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தானன, தானத்தத், நற்கதியை, என்ற, செயல், தூரம், உள்ளது, பெருமாளே, வொணாதது, காதத்திற், திருக்குற்றாலம், அளவு

