திருப்புகழ் - பாடல் 87 - திருச்செந்தூர்
ராகம் - .....;
தாளம் -
|
தனதனன தந்த தனதனன தந்த தனதனன தந்த ...... தனதானா |
|
மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர் வலிமைகுல நின்ற ...... நிலையூர்பேர் வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள் வரிசைதம ரென்று ...... வருமாயக் கனவுநிலை யின்ப மதனையென தென்று கருதிவிழி யின்ப ...... மடவார்தம் கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து கருவில்விழு கின்ற ...... தியல்போதான் நினையுநின தன்பர் பழவினைக ளைந்து நெடுவரைபி ளந்த ...... கதிர்வேலா நிலமுதல்வி ளங்கு நலமருவு செந்தில் நிலைபெறஇ ருந்த ...... முருகோனே புனைமலர்பு னைந்த புனமறம டந்தை புளகஇரு கொங்கை ...... புணர்மார்பா பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள் பொடிபடந டந்த ...... பெருமாளே. |
வீடு, பொன், மக்கள், தம்முடைய அழகிய மனைவி முதலியோர், (தமது) வலிமை, குலம், சமூகத்தில் இருக்கும் நிலை, தம்முடைய ஊர், பேர், வளர்ச்சி உறும் இளமை, (தமக்குள்ள) பற்றுக்கோடு, துணிவு, அணியும் ஆபரணம் ஆகிய செல்வங்கள், மேம்பாடு, சுற்றத்தார் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற மாயமான கனவில் வருவதைப் போல நிலை இல்லாத சிற்றின்பத்தை எனது என்று நினைத்து, கண்ணால் இன்பம் ஊட்டும் மாதர்களுடைய கலவி மயக்கத்தைப் பூண்டு பல உடல்களைப் புணர்ந்து, பல பிறவிகள் எடுப்பது தக்கது ஆகுமோ? நினைக்கின்ற உன் அன்பர்களுடைய பழ வினைகளை நீக்கி, நீண்ட (கிரவுஞ்ச) மலையைப் பிளந்த, ஒளி வீசும் வேலனே, பூமியில் சிறப்புடன் முதல் இடமாக விளங்குகின்ற அழகைப் பெற்ற திருச்செந்தூர் தலம் நிலை பெறுமாறு வீற்றிருந்த முருகனே, அலங்காரத்துக்குத் தக்க மலர்களை அணிந்த (வள்ளிமலையின் தினைப்) புனத்தில் இருந்த வேடப் பெண்ணாகிய வள்ளியின் புளகிதம் கொண்ட இரு மார்பகங்களையும் அணைந்த மார்பனே, சண்டை செய்து உடனே எதிர்த்து வந்த அசுரர்களுடைய மணி மகுடங்கள் பொடியாகும்படி (போருக்கு) வீர நடை நடந்த பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 85 | 86 | 87 | 88 | 89 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நிலை, தந்த, தனதனன, தம்முடைய, யின்ப, திருச்செந்தூர், பெருமாளே

