திருப்புகழ் - பாடல் 860 - திருவிடைமருதூர்
ராகம் - ...; தாளம் -
|
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தந்ததான |
|
படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும் தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும் பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் ...... செம்பொன்மேனிப் பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந் திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும் பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் ...... துன்றுமூலச் சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங் குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன் சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென் ...... றுய்ந்துபாடித் தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன் பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன் தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் ...... சிந்தியாதோ கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம் பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங் கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் ...... கண்டுசேரக் கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின் றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங் கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் ...... துங்கவேலா அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம் பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங் கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந் ...... தங்குமார்பா அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங் கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென் றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் ...... தம்பிரானே. |
பூமியை தமது காலால் அளவிட்ட, பெரிய மேக நிறம் கொண்ட திருமாலும், யமனும், ஒலியுடன் ஓதப்படும் நான்கு வேதங்களும், தவர்கள் கூட்டமும், பிரமனும் போற்றுதற்கு அரிய அரசன், நெருப்பால் சுட்டழிக்கும் தன்மை உடையவன், செம்பொன் போன்ற மேனியை உடைய மேலானவன், அழகு கொண்ட பாம்புகளையும், கங்கை நதியையும், லக்ஷ்மி வாசம் செய்யும் தாமரையையும், நிலவையும், கொன்றையையும், பருத்த குமிழம் பூவையும், அறுகம் புல்லையும், பெருமை வாய்ந்த தும்பையையும், செம்பருத்தி மலரையும், நெருக்கமாக பிரதானமாக விளங்கும் சடை முடியில் அணிந்துள்ள நல்ல சிவபெருமான் வணங்கும் குமரன், ஆறு முகத்தவன், இனிமையான செவ்விய சொற்களைப் பேசுபவன், சரவண மடுவில் வந்த முதல்வன், (தேவ) சேனாபதி கந்தன் என்று, ஈடேறும்படிப் பாடி, குளிர்ந்த சொற்களைச் சொல்லும் வழி ஒன்றிலும் நான் சென்றவன் அல்லன். (பிறரோடு ஒன்று) பகிர்ந்து கொள்ள எண்ணி, ஒரு தினை அளவாவது ஈகைக் குணத்தைக் கொண்டு அணுகாதவன் நான். தவ வழியில் ஒழுகி நல் வழியில் சீர் பெறும் தீர்மானமான முயற்சி என் மனதில் உதிக்காதோ? கடுகைப் போல் பொடிப் பொடியாய்த் தவிடுபடும்படி, மந்திரமும், தந்திரமும் பயின்று வந்த அசுரர்களின் உடல்களைப் பிளந்து, கடல் கதறி நிரம்ப இரத்த ஆறு பொங்கி ஓடும்படியான களிப்புக்கு இடமான நிறைவைப் பார்த்து, அப்போர்க்களத்தில் சேரும்படி, கழுகும், நரியும், காகமும், கருடனும் அங்கு வந்து கூடி எங்கும் நிற்கவும், பல பேய்கள் கூடி பம்பை மேளத்தைக் கொட்டி தந்தனம் தந்தனம் என்ற ஒலிகளை எழுப்பி இசைகளைப் பொழியும் (பிணத்தை உண்ணும்) ஆசையைப் பார்த்து மகிழ்ச்சி உறுகின்ற பரிசுத்தமான வேலனே, வெற்றி விளங்கும் திருவிடைமருதூரில்* வந்து பொருந்தியிருக்கும் குணத்தில் சிறந்த குருபரனே, குமரனே, யானைகள் சென்று உறங்கும் (வள்ளிமலைக்) காட்டில் வசிக்கும் வள்ளியின் சந்தனம் விளங்கும் மார்பில் படியும் திருமார்பனே. சிவந்த ரத்தினங்கள் ஒளி வீசி விளங்கும் தண்டைகள் அணிந்த அழகிய தாமரை போன்றதும், கருணை பொழிவதுமான நினது திருவடிகளின் எழிலே நமக்குப் பற்றுக்கோடு என்று உணர்ந்து உறுதி பூண்டு, அந்த நன்னெறியை அழகு வாய்க்கத் தடவிப் பற்றி, தேவர்களும் தொண்டு பூண்டுள்ள தம்பிரானே.
* திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 858 | 859 | 860 | 861 | 862 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தந்தனந், தனதனன, விளங்கும், பார்த்து, வழியில், கூடி, தந்தனம், நான், வந்து, வந்த, தம்பிரானே, கொண்ட, அழகு, திருவிடைமருதூர், என்று

