திருப்புகழ் - பாடல் 836 - திருக்குடவாயில்
ராகம் - ....; தாளம் -
|
தனனா தத்தன தனனா தத்தன தனனா தத்தன ...... தனதான |
|
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு ...... விலைமாதர் அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக ளவரே வற்செய்து ...... தமியேனும் மயலா கித்திரி வதுதா னற்றிட மலமா யைக்குண ...... மதுமாற மறையால் மிக்கருள் பெறவே யற்புத மதுமா லைப்பத ...... மருள்வாயே கயிலா யப்பதி யுடையா ருக்கொரு பொருளே கட்டளை ...... யிடுவோனே கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே குயிலா லித்திடு பொழிலே சுற்றிய குடவா யிற்பதி ...... யுறைவோனே குறமா தைப்புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் ...... பெருமாளே. |
வேல் போன்ற, மை பூசிய, விஷம் கொண்ட கண்களை உடையவர்கள், பயனற்றவர்கள், பக்கத்தில் வருபவர்கள் விரும்புகின்ற வேசிகள், படுக்கையில் தூங்கும் பொழுதிலேயே வஞ்சிப்பவர்கள், அவர்கள் ஏவின வேலைகளைச் செய்து தன்னந்தனியனான அடியேனும் மயக்கம் கொண்டவனாகத் திரிகின்ற செய்கை ஒழிந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் ஏற்படும் தீய குணம் ஒழிந்து போக, வேதங்களை நான் ஓதி ஓதி, நின் திருவருளைப் பெறுமாறு, அற்புதமான தேன் நிரம்பிய மாலைகள் அணியப்பட்ட திருவடியைத் தந்து அருளுக. கயிலை மலையை உடையவராகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிரணவப் பொருளை மேல் நிலையில் நின்று உபதேசித்தவனே, கடலில் ஓடிப் புகுந்த பழைய சூரன் அழிபட, ஒளி பொருந்திய வேலை விட்ட பராக்கிரமசாலியே, குயில்கள் கூவுகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள குடவாயில்* என்னும் நகரில் உறைபவனே, குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் செய்த வல்லமை உடையவனே, ஞான மூர்த்தியே, குறைவுபடாத உண்மைத் தவ நிலையை உடையார் தம் பெருமாளே.
* திருக்குடவாயில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் குறடாச்சேரி ரயில் நிலையத்தின் வடக்கே 8 மைலில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 834 | 835 | 836 | 837 | 838 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனனா, தத்தன, ஒழிந்து, பெருமாளே, வேல், திருக்குடவாயில்

