திருப்புகழ் - பாடல் 832 - எட்டிகுடி
ராகம் - ஆரபி
தாளம் - அங்கதாளம் - 10 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3
|
தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான |
|
ஓங்கு மைம்புல னோட நினைத்தின் ...... பயர்வேனை ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் ...... தனையாள்வாய் வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் ...... புகடாவி வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் ...... குமரேசா மூங்கி லம்புய வாச மணக்குஞ் ...... சரிமானு மூண்ட பைங்குற மாது மணக்குந் ...... திருமார்பா காங்கை யங்கறு பாசில் மனத்தன் ...... பர்கள்வாழ்வே காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் ...... பெருமாளே. |
மிகுத்து வளரும் ஐந்து புலன்களும் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை) என்னை இழுத்தோட யானும் அவ்வழியே ஓட நினைத்து, இன்பம் கொண்டு தளர்ச்சி அடைவேனை, ஓம் முதலிய ப்ரணவ மந்திரங்கள் அத்தனையும் எனக்கு உபதேசித்து, என்னை ஆண்டருள்வாயாக. வில்லை வளைத்து கொடிய அம்புகளை ஏவி சூரர் குல இளைஞர்கள் பாய்ந்துவர, வளைத்து நின்ற சூரர் சேனையை அம்பைச் செலுத்தியே வென்ற குமரேசனே, மூங்கிலைப் போன்று அழகிய புயங்களை உடைய, நறுமணமிக்க (யானைமகள்) தேவயானையும், உன்மேல் பக்தியும் காதலும் மூண்ட அழகிய குறப்பெண் வள்ளியும் மணந்த திருமார்பனே, மனக்கொதிப்பே இல்லாதவர்களும், பாசம், பந்தம் ஆகியவை நீங்கிய மனத்தவர்களுமான அன்பர்களின் செல்வமே, காஞ்சிரங்குடி (எட்டிக்குடி*) என்ற திருத்தலத்தில் ஆறுமுகத்தோடு அமர்ந்த எங்கள் பெருமாளே.
* எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத் தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 830 | 831 | 832 | 833 | 834 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சூரர், தகதிமி, பெருமாளே, ஆகியவை, வளைத்து, அழகிய, மூண்ட, என்னை, வாங்கி, தாந்த, தந்தன, தனத்தம், தனதான, எட்டிகுடி

