திருப்புகழ் - பாடல் 822 - திருவர்ருர்
ராகம் - குந்தல வராளி
தாளம் - ஆதி - 2 களை - 16
|
தானா தானா தனதன தனதன தானா தானா தனதன தனதன தானா தானா தனதன தனதன ...... தனதான |
|
பாலோ தேனோ பலவுறு சுளையது தானோ வானோர் அமுதுகொல் கழைரச பாகோ வூனோ டுருகிய மகனுண ...... வருண்ஞானப் பாலோ வேறோ மொழியென அடுகொடு வேலோ கோலோ விழியென முகமது பானோ வானூர் நிலவுகொ லெனமகண் ...... மகிழ்வேனை நாலாம் ரூபா கமலஷண் முகவொளி யேதோ மாதோம் எனதகம் வளரொளி நானோ நீயோ படிகமொ டொளிரிட ...... மதுசோதி நாடோ வீடோ நடுமொழி யெனநடு தூணேர் தோளா சுரமுக கனசபை நாதா தாதா எனவுரு கிடஅருள் ...... புரிவாயே மாலாய் வானோர் மலர்மழை பொழியவ தாரா சூரா எனமுநி வர்கள்புகழ் மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனவோதா வாதா டூரோ டவுணரொ டலைகடல் கோகோ கோகோ எனமலை வெடிபட வாளால் வேலால் மடிவுசெய் தருளிய ...... முருகோனே சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓதார் சீராள் கதிர்மதி குலவிய தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் ...... அருள்பாலா தூயா ராயார் இதுசுக சிவபத வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு சூழ்சீ ராரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே. |
பாலோ, தேனோ, பலாப் பழத்தில் உள்ள சுளைதானோ? தேவர்கள் உண்ணும் அமுதம்தானோ, கரும்பு ரச வெல்லப் பாகோ? ஊன் உருகத் தேவாரம் பாடிய மகன் திருஞான சம்பந்தர் உண்ணும்படி (உமா தேவியார்) அருளிய ஞானப் பால்தானோ? வேறு ஏதாவதோ ஒப்புரைக்கத் தக்கதோ (இந்தப் பெண்களின்) மொழி என்றும், கொல்லுதலைக் கொண்ட வேலோ, அம்பு தானோ (அம்மாதர்களின்) கண்கள் என்றும், முகம் சூரிய ஒளிதானோ, அல்லது ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் சந்திர ஒளியோ என்றும், பெண்களிடம் மகிழ்ச்சி கொள்ளும் நான் பல உருவமும் கொண்ட உருவத்தனே, தாமரை போன்ற ஆறு முக ஒளியே, அல்லது வேறு எதுவோ, பெரிய குற்றம் கொண்ட என்னுடைய மனத்தில் வளர்கின்ற ஜோதியே, நானோ நீயோ பளிங்குபோல் விளங்கும் இடம் அது ஒரு ஜோதி மயமானது, அது நாடுதானோ அல்லது மோட்ச வீடோ? நடு நிலைமையான உண்மை மொழியை நிலை நிறுத்தியவனே, நடுவில் உள்ள தூணுக்குச் சமமான தோள்களை உடையவனே, தேவர்கள் முன்னிலையில் பெருமை தங்கிய சபையில் விளங்கும் நாதனே, கொடை வள்ளலே என்று மனம் உருகுமாறு மீண்டும் மீண்டும் வேண்டினவர்களுக்குத் திருவருள் புரிவோனே, காதல் பூண்டவராக தேவர்கள் பூமாரி பொழிய பூமியில் அவதாரம் செய்தவனே, சூரனே என முனிவர்கள் புகழும் மாயா ரூபனே, அரகர சிவசிவ என்று உன்னை ஓதாமல், வாதாடி நின்ற அவுணர்களும், அவர்கள் ஊரில் இருந்தவர்களும், அலை கடலும் கோகோ என்று அலறவும், (கிரவுஞ்சமும், ஏழு குலமலைகளும்) வெடிபட்டுப் பொடியாகவும், வாளாலும், வேலாலும் அவர்களை அழியச்செய்து அருளிய முருகனே, சூலம் ஏந்தியவளான துர்க்கை, திருமாலுக்கு உரியவளான பூ மகளாகிய லக்ஷ்மி, சரஸ்வதி, இவர்கள் ஓதித் துதிக்கும் சீர்படைத்தவள், கதிர் வீசும் நிலவின் ஒளிகொண்ட தோடு என்னும் அணிகலனை அணிபவள், மலை போன்ற இரண்டு மார்பகங்களை உடைய உமா தேவியார் முன்பு அருளிய குழந்தையே, பரிசுத்தமானவர்களும், உன்னைத் தியானிப்பவர்களும் இந்தத் திருவாரூர் வாழ்வே சுகமான சிவ பத வாழ்வு, இங்கேயே தங்கி வாழ்வோம், என்னும் ஞான உணர்ச்சியோடு வந்து சூழ்கின்ற, சிறப்புள்ள திருவாரூரில்* சேர்ந்துள்ள தேவர்களின் பெருமாளே.
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 820 | 821 | 822 | 823 | 824 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தானா, தனதன, அருளிய, தேவர்கள், என்றும், அல்லது, என்று, கொண்ட, கோகோ, பாலோ, தேனோ, தானோ, வானோர், வேறு, போன்ற, விளங்கும், திருவாரூர், என்னும், மீண்டும், பாகோ, தேவியார், அரகர, மாயா, வீடோ, நீயோ, சிவசிவ, ரூபா, வேலோ, உள்ள, பெருமாளே, நானோ

