திருப்புகழ் - பாடல் 8 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஸாவேரி;
தாளம் - ஆதி
|
தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான |
|
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே. |
யான் உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை. உன் தன்மைகளை எடுத்து உரைப்பதுமில்லை. பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளை பொருந்தப் பணியவில்லை. ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை. உன்னருள் நீங்காத உள்ளத்தை உடைய அன்பர் இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும் இல்லை. ஆர்வத்தோடு உன் மலையை வலம்வருவதும் இல்லை. மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க விரும்புவதும் இல்லை. மலைபோல் உருவமுடன், கனைத்தவாறு வரும் எருமையின் கழுத்தின் மீது வருகின்ற, கரிய நிறமும் கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள் என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற பாசக்கயிறு கொண்டும், துன்புறுத்தும் கதாயுதம் கொண்டும் என்னோடு போரிடும் போது, மனம் கலங்கும் செயலும், ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும் நைந்துபோய் யான் துன்புறும்போது ஒரு கண அளவில் என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி மயிலின் முதுகினில் நீ வருவாயாக. போர்க்களத்தில் பேய்கள் கூத்தாடுவதால் ஊன் உடைந்து உடல்களிலிருந்து சிதறின மாமிசத்தை கழுகுகள் உண்ணவும், விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும் அசுரர்களோடு போர் புரிந்த வேலனே, நிறைய ராகங்களில் பாடவல்ல குயிலின் மொழி ஒத்த குரலாள், அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்) குங்குமம் அணிந்த மார்பில் அழுந்தும் வாசமிகு சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த மலை போன்ற தோள்களை உடையவனே, தினந்தோறும், நால்வேதமும்வல்ல பிரம்மா விதிப்படி, நீரால் அபிஷேகம் செய்து, பூக்களை நிறைய அர்ச்சித்து, தேவர்களும் கோபத்தை நிந்தித்து விட்ட முனிவர்களும் தொழ, அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே, தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் இசைக்கும் வண்டுகள் தேனைத் தெவிட்டும் அளவுக்கு ஆசையுடன் குடிக்கும் உயர்ந்த சோலைகள் விளங்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனதன, இல்லை, யான், தனத்த, தந்தன, கொண்டும், மனம், அணிந்த, நிறைய, உடைய, தினந்தோறும், விரித்த, மகிழ்வோனே, சரவண, முதுகினில்

