திருப்புகழ் - பாடல் 790 - பாகை
ராகம் - ஹிந்தோளம்
தாளம் - ஆதி - 2 களை
தாளம் - ஆதி - 2 களை
|
தான தனந்தன தான தனந்தன தான தனந்தன ...... தனதான |
|
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற ...... இளையாதே ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு காடு பயின்றுயி ...... ரிழவாதே மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் வேறு படுந்தழல் ...... முழுகாதே மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே வாளை நெருங்கிய வாவியி லுங்கயல் சேல்கள் மறிந்திட ...... வலைபீறா வாகை துதைந்தணி கேதகை மங்கிட மோதி வெகுண்டிள ...... மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனந்தலை சாடி நெடுங்கடல் ...... கழிபாயும் பாகை வளம்பதி மேவி வளஞ்செறி தோகை விரும்பிய ...... பெருமாளே. |
கோழை, காய்ச்சல், குளிர், வாதம் என்ற பல நோய்கள் என்னைச் சூழ்ந்து நான் மிகவும் இளைப்பு அடையாமல், வலிமையை இழந்து துன்பமடையும் சிறிய கூடாகிய இவ்வுடலில் புகுந்து சுடுகாட்டிற்குச் சேரும்படி உயிரை இழக்காமல், மூளை, எலும்புகள், நாடிகள், நரம்புகள் இவையெல்லாம் வெவ்வேறாகும்படி நெருப்பில் மூழ்கி வேகாமல், மூலப்பொருளான சிவயோக பதவியில் நான் வாழ்வுபெறும்படியாக உபதேசித்தருள்வாயாக. வாளை மீன்கள் தமக்கு அருகில் உள்ள குளத்தில் இருக்கும் கயல் சேல் மீன்கள் இவற்றை விரட்டி, வலைகளைக் கிழித்து, வெற்றி கொண்டாடி, வரிசையாக இருந்த தாழம்பூக்கள் உருக்குலையும்படி அவற்றை மோதிக் கோபிக்க, பிறைச்சந்திரன் படியும் உயரமான பாளைகளைக் கொண்ட நறுமணம் கமழும் கமுக மரக்காட்டில் அந்த மீன்கள் உச்சியில் சாடி, பெரிய கடலின் உப்பங்கழியில் பாயும், பாகை* என்ற வளமான தலத்தில் வீற்றிருந்து, வளப்பம் நிறைந்த தோகைமயிலான வள்ளியை விரும்பிய பெருமாளே.
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள 'பாகசாலை' என்னும் தலம்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 788 | 789 | 790 | 791 | 792 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பாகை, மீன்கள், தனந்தன, என்ற, நான், பெருமாளே, உள்ள, சாடி, நோய்கள், மூளை, நரம்புகள், வாளை, விரும்பிய

