திருப்புகழ் - பாடல் 765 - சீகாழி
ராகம் - ....;
தாளம் -
|
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
|
இரத மான தேனூற லதர மான மாமாத ரெதிரி லாத பூணார ...... முலைமீதே இனிது போடு மேகாச உடையி னாலு மாலால விழியி னாலு மாலாகி ...... யநுராக விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும் விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய் அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர் அடிகள் பூசி யாமூடர் ...... கரையேற அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர் அறம்வி சாரி யாமூடர் ...... நரகேழிற் புரள வீழ்வ ¡£ராறு கரவி நோத சேய்சோதி புரண பூர ணாகார ...... முருகோனே புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே. |
சுவை நிரம்பிய தேன் போல ஊறும் வாய் இதழ் ஊறலை உடைய அழகிய விலைமாதர்களின் நிகர் இல்லாத அணிகல மாலைகள் கொண்ட மார்பகங்களின் மேல் அழகாக அணிந்துள்ள மேலாடை உடையினாலும், ஆலகால விஷத்தைப் போன்ற கண்களாலும் காம மயக்கம் கொண்டு, காமப் பற்றினால் வேதனைப்பட்டு, படுக்கையில் எப்போதும் நாள் தோறும் கஸ்தூரி முதலிய நறு மணங்கள் சேர்ந்துள்ள கூந்தலின் நிழலிலே மூழ்கினவனாய், (அதனால்) ஏற்படும் காம மயக்கம் என்னும் பெரிய மாயை என்னை விட்டு அகலுமாறு, நாயினும் அடியவனாகிய நானும் வீணன் ஆகாதவாறு உன்னுடைய திருவருளைத் தந்தருளுக. அரகரா என்று கூறாத மூடர்கள், திருநீற்றைப் பூசாத மூடர்கள், அடியவர்களைப் பணியாத மூடர்கள், கரை ஏறுவதற்கான நல்ல அறிவைத் தரும் ஞான நூல்களைக் கல்லாத மூடர்கள், நல்ல நெறியைக் கடைபிடிக்காத மூடர்கள், தருமம் இன்னதென்று கூட விசாரணை செய்யாத மூடர்கள் ஏழு* நரகங்களிலும் புரளும்படி விழுவார்கள். பன்னிரண்டு திருக் கரங்களை உடைய விநோதனே, செவ்வேளே, ஜோதி வடிவானவனே, நிறைந்த ஒளி பொருந்திய பூரண உருவத்தனே, முருகனே, மேகம் உலாவும் விண் நாட்டவர் போற்றிப் பரவி நாள்தோறும் ஈடேறுகின்ற சீகாழியில்** வீற்றிருந்து வாழ்கின்ற, தேவர்களின் பெருமாளே.
* ஏழு நரகங்கள் பின்வருமாறு: கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 763 | 764 | 765 | 766 | 767 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தலம், பூஜித்த, மூடர்கள், என்னும், தானான, சீகாழி, நல்ல, மற்ற, முனிவர், சண்பை, உடைய, யாமூடர், னாலு, லாமூடர், பரவி, பெருமாளே, புகலி, மயக்கம்

