திருப்புகழ் - பாடல் 754 - நிம்பபுரம்
ராகம் -
ஸிம்மேந்திர மத்யமம்
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
|
தந்ததன தான தந்ததன தான தந்ததன தான ...... தனதான |
|
அஞ்சுவித பூத முங்கரண நாலு மந்திபகல் யாது ...... மறியாத அந்தநடு வாதி யொன்றுமில தான அந்தவொரு வீடு ...... பெறுமாறு மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர் மங்கைதனை நாடி ...... வனமீது வந்தசர ணார விந்தமது பாட வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே குஞ்சரக லாப வஞ்சியபி ராம குங்குமப டீர ...... வதிரேகக் கும்பதன மீது சென்றணையு மார்ப குன்றுதடு மாற ...... இகல்கோப வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர வென்றிவடி வேலை ...... விடுவோனே விம்பமதில் சூழு நிம்பபுர வாண விண்டலம கீபர் ...... பெருமாளே. |
பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு கரணங்களும், இரவு - பகல் என்ற இரண்டும் அறியாத முடிவு, நடு, முதல் ஒன்றும் இல்லாததான அந்த ஒப்பற்ற மோக்ஷ இன்பத்தைப் பெறுமாறு, மேகம் தவழ்கின்ற சிகரங்களை உடைய அழகிய மலைவாழ் வேடர்களின் மகளாகிய வள்ளியை விரும்பி வள்ளிமலைக் காட்டில் வந்தடைந்த திருவடித் தாமரைகளைப் பாட எனக்கு வண்தமிழில் அற்புதக் கவித்துவத்தை நீ அருள்வாயாக. ஐராவதம் என்ற யானை வளர்த்த, மயிலின் சாயலுடைய, மங்கை தேவயானையின் அழகிய செஞ்சாந்தும் சந்தனமும் மிகுதியாகப் பூசியுள்ள மார்பின் மீது மனதாரத் தழுவி அணைக்கும் திருமார்பா, கிரெளஞ்சகிரி தடுமாற்றம் அடையுமாறு அதன்மீது பகைத்துக் கோபித்தவனே, கொடிய போரினைச் செய்த சூரனுடைய நெஞ்சு பிளவுபட வீரம் வாய்ந்த வெற்றி தரும் கூரிய வேலினைச் செலுத்தியவனே, ஒளி பொருந்திய மயில்கள் சூழ்ந்துள்ள நிம்பபுரம்* என்ற தலத்தவனே, விண்ணுலகத்துத் தேவேந்திரர்களின் பெருமாளே.
* நிம்பபுரம் என்பது வேப்பூர் என்று கருதப்படுகிறது. நிம்பம் என்றால் வேம்பு.வேப்பூர் தென்னாற்காடு மாவட்டத்தில் பாலாற்றங் கரையில் ஆற்காட்டுக்கு அருகில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 752 | 753 | 754 | 755 | 756 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்ற, தந்ததன, அழகிய, வேப்பூர், மீது, பெறுமாறு, நிம்பபுரம், பெருமாளே

