திருப்புகழ் - பாடல் 693 - திருமயிலை
ராகம் - ....;
தாளம் -
|
தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த ...... தனதான |
|
களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற கலகமத வேள்தொ டுத்த ...... கணையாலுங் கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற கனலெனவு லாவு வட்ட ...... மதியாலும் வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி வனிதைமடல் நாடி நித்த ...... நலியாதே வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி மலரணையில் நீய ணைக்க ...... வரவேணும் துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப துயிலதர னாத ரித்த ...... மருகோனே சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர துரகதக லாப பச்சை ...... மயில்வீரா அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப அருள்பரவு பாடல் சொற்ற ...... குமரேசா அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே. |
கலவைச் சாந்தும் மணி மாலையும் கொண்ட, தாமரை மொட்டுப் போன்ற மார்பின் மீது, வீரம் வாய்ந்தவனும், குழப்பத்தை உண்டு பண்ணும் காம விகாரம் தருபவனுமாகிய மன்மதன் செலுத்திய அம்புகளாலும், இனிமையான மொழிகளை உடைய மின்னல் போன்ற ஒளி கொண்ட மாதர்கள் அனைவரும் வேண்டுமென்றே பழிச் சொற்களைப் பேசுவதாலும், சேர்ந்துள்ள நெருப்புப் போல உலவி வரும் பூரண நிலவாலும், செழுமை கொண்ட, விரிந்த மலர்களால் அமைந்த படுக்கையின் மெத்தை மீது உருகும் இப்பெண் மடலேற* விரும்பி நாள் தோறும் துன்பம் அடையாமல், ரேகைகள் கொண்ட வண்டுகள் உலவி நெருங்கியுள்ள (மாலையை அணிந்த) இரண்டு புயங்களாலும் கலந்து, அவளது எண்ணம் வெற்றி பெற இந்த மலர்ப்படுக்கையில் நீ அணைக்க வர வேண்டுகின்றேன். துளசி மாலை அணிந்த மார்பன், சக்கரம் தரித்தவன், விஷ்ணு, முராசுரனைக் கொன்ற முராரி, ஆதிசேஷன் என்னும் பாம்பின்மேல் துயில் கொள்ளுபவன் விரும்புகின்ற மருகனே, வேதம், உபநிஷதம், வேள்வி இவை நிரம்பிய திருமயிலையில்** வீற்றிருப்பவனும், உக்ரமான குதிரையாகிய, தோகையுடைய பச்சை மயில் ஏறும் வீரனே, அளகாபுரி நகரத்துச் செல்வம் கொண்ட செட்டிக் குலத்தில் பிறந்த (பூம்பாவை என்னும்) பெண்ணின் உயிரை மீளும்படி அழைக்க வேண்டி இறைவன் திருவருள் பரவிய பதிகத்தை (ஞான சம்பந்தராக அவதரித்துச்) சொன்ன குமரேசனே, அருமையான கிரெளஞ்ச மலையைத் தூளாக்கி, அசுரர்களை வேரோடு அழித்து, தேவர்களைப் பொன்னுலகில் வாழ வைத்த பெருமாளே.
* கடவுள் சம்பந்தமாக மட்டும் பெண்பாலோர் மடலேறுதல் கூறப்படும்.மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
** திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு, ஊராரின் வசைப் பேச்சு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 691 | 692 | 693 | 694 | 695 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கொண்ட, மீது, தனதனன, தத்த, போன்ற, என்னும், மன்மதன், அணிந்த, பெருமாளே, உலவி, பச்சை, லாவு, திருமயிலை, வெற்றி, வேள்வி, பாடல், வைத்த

