திருப்புகழ் - பாடல் 676 - திருவாலங்காடு
ராகம் - :
தாளம் -
|
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த ...... தனதான |
|
வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம் மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன் படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப் பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில் முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய் இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே. |
உடலின் நிறத்தை கருநீலமாகக் காட்டி, முடிவு காலத்தில் வரும் யமன்அழைத்து வர அனுப்புகின்ற அவனுடைய தூதன் வளைத்து எறிகின்ற பாசக் கயிற்றினால் (மரணம் அடைகின்ற பொழுது), மகனும், மாமன், பாட்டி முதலான உறவினர்களும் (மரண நிலையைக்) கேட்டு புத்தி கலங்கும்படி, உலக மாயை அதிகமாகி உயிர் போவதற்கு முன்பு, இந்தப் பூமியில் உனது திருவடிகளைக் காட்டி, உடலுக்கு ஏற்பட்ட நோய்கள், முன் செய்த கர்மப் பயனால் அடைந்துள்ள பழைய வினைகளாகிய பாவங்களை ஒழித்து, உனது அடியேனாகிய என்னை அன்புடன் நாள்தோறும் காத்தளித்து, விரிந்த அழகிய தமிழ் மொழியால் அழகு மிக்க மேலான திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட்கொண்டு அருள் புரிவாயாக. தலையில் சந்திரனைத் தரித்து, அழகுள்ள திருவாலங்காடு* என்னும் ஊரில் முதன்மையான நடனம்** ஆடுகின்ற கூத்தர் நடராஜனின் மகனே, நறுமணம் கமழும் மாலையையும் சூட்டி, ஒப்பற்றுத் தனித்து வர யானையையும் (விநாயகரையும்) வரவழைத்து முன்பு, வேடர்குலப் பெண்ணாகிய வள்ளியோடு சேர்தலில் மோகம் மிக்கவனே, இடியைப் போல வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் கொண்ட சூலாயுதத்தைக் கையில் எடுத்து, எதிர்த்து வந்த சூரன் சண்டைக்கு வர, அவனை எதிர்த்துச் சென்று விளங்குகின்ற வேலாயுதத்தை ஆரவாரத்துடன் செலுத்தி, அவன் உடலை இரண்டு பிளவாக அன்று ஆக்கி, தேவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமாளே.
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை.
** திருவாலங்காட்டில் செய்யப்பட்ட நடனம் சண்ட தாண்டவம் (ஊர்த்துவ தாண்டவம்). இது ஆகாய உச்சியை நோக்கி மேலே செல்லும்படியாக இடது பாதத்தைத் தூக்கி வலது பாதத்தை ஊன்றிச் செய்யப்படும் சம்ஹார தாண்டவமாகும். இது பிறவியை நீக்கும் என்பது கோட்பாடு.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 674 | 675 | 676 | 677 | 678 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - காட்டி, சூட்டி, தாத்த, தானந், தனதன, சூரன், கூத்தர், பெருமாளே, தாண்டவம், உனது, முன்பு, பாட்டி, தூதன், கூட்டி, மாமன், திருவாலங்காடு, கேட்டு, தீட்டி

