திருப்புகழ் - பாடல் 636 - கதிர்காமம்
ராகம் - குந்தல
வராலி; தாளம் - ஆதி
|
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான |
|
திருமக ளுலாவு மிருபுய முராரி திருமருக நாமப் ...... பெருமாள்காண் செகதலமும் வானு மிகுதிபெறு பாடல் தெரிதரு குமாரப் ...... பெருமாள்காண் மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு மரகதம யூரப் ...... பெருமாள்காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண் அருவரைகள் நீறு படஅசுரர் மாள அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண் அரவுபிறை வாரி விரவுசடை வேணி அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண் இருவினையி லாத தருவினைவி டாத இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார இருதனவி நோதப் ...... பெருமாளே. |
லக்ஷ்மிதேவி விளையாடும் இரண்டு புயங்களும் உடைய திருமாலின் அழகிய மருகன் என்ற திருநாமத்தைக் கொண்ட பெருமான் நீதான். மண்ணுலகிலும் விண்ணுலகிலும் மிகவும் போற்றிப் புகழும் (தேவாரப்) பாடல்களை அளித்தருளிய (ஞானசம்பந்த) குமாரப்பெருமான் நீதான். வணங்கும் அடியார்களின் மனதிலே விளையாடும் பச்சை மயில் ஏறும் பெருமான் நீதான். மணியையும் முத்தையும் வீசி அழகிய அருவி* சூழ்ந்து விளங்கும் கதிர்காமத் தலத்துப் பெருமான் நீதான். பெருமலைகள் பொடிபட, அசுரர்கள் இறக்க போர் புரிந்த வீரப் பெருமான் நீதான். பாம்பு நிலவு, கங்கை நீர் இவை கலந்த சடையுடைய பரிசுத்தமான சிவனுக்கு குருநாதப்பெருமான் நீதான். நல்வினை தீவினை என்பதே இல்லாதவர்களும் கற்பகத் தருவை விட்டு நீங்காதவர்களுமான தேவர்களின் குலத்துக்கு அரசன் தேவேந்திரனுக்கும் பெருமான் நீதான். விளங்கும் வில் ஏந்திய வேடர்குலக் கொடி வள்ளியின் அதிக பாரமான இரு மார்பிலும் களிக்கும் பெருமாளே.
* அருவி - கதிர்காமத்துக்கு அருகில் மாணிக்க நதியில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 634 | 635 | 636 | 637 | 638 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நீதான், பெருமாள்காண், பெருமான், தனதனன, விளங்கும், அழகிய, பெருமாளே, வீசி, வீரப், பாடல், விளையாடும்

