திருப்புகழ் - பாடல் 613 - குருடிமலை
ராகம் -...; தாளம்
-
|
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான |
|
கருடன் மிசைவரு கரிய புயலென கமல மணியென ...... வுலகோரைக் கதறி யவர்பெயர் செருகி மனமது கருதி முதுமொழி ...... களைநாடித் திருடி யொருபடி நெருடி யறிவிலர் செவியில் நுழைவன ...... கவிபாடித் திரியு மவர்சில புலவர் மொழிவது சிறிது முணர்வகை ...... யறியேனே வருடை யினமது முருடு படுமகில் மரமு மருதமு ...... மடிசாய மதுர மெனுநதி பெருகி யிருகரை வழிய வகைவகை ...... குதிபாயுங் குருடி மலையுறை முருக குலவட குவடு தவிடெழ ...... மயிலேறுங் குமர குருபர திமிர தினகர குறைவி லிமையவர் ...... பெருமாளே. |
கருடன்மேல் வருகின்ற கரு மேகம் போன்ற திருமால் நீ என்றும், தாமரை (பதும நிதி), சிந்தாமணி நீ என்றும் உலகத்தில் உள்ளவர்களை கூச்சலிட்டு, பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மனத்தில் மிக்க கருத்துடன் பழைய செஞ் சொற்களைத் தேடியும், திருடியும், ஒரு படி அளவுக்குத் திரித்து அப்பாடலில் அமைத்தும், அறிவில்லாத மனிதர்களுடைய காதுகளில் நுழையும் படி பாடல்களைப் பாடியும், திரிகின்றவர்களாகிய சில புலவர்கள் கூறுவது, சற்றேனும் உணரும்படியான வழியை நான் அறிந்திலேன். மலை ஆடுகளின் கூட்டமும், கரடு முரடு உள்ள அகில், மருதம் ஆகிய மரங்களும் அடி பெயர்ந்து சாயும்படி, மதுரம் என்ற ஆறு பெருகி இரண்டு கரைகளும் வழிந்து ஓடி, பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற குருடி மலையில்* வீற்றிருக்கும் முருகனே, சிறந்த வட மலை ஆகிய கிரெளஞ்சம் தவிடு பொடியாய்த் தூள் எழ மயிலில் ஏறும், குமரனே, குருபரனே, அஞ்ஞான இருளுக்கு ஓர் சூரியனே, குறைவில்லாத தேவர்களின் பெருமாளே.
* குருடிமலை கோயமுத்தூருக்கு அருகில் துடியலூர் ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 611 | 612 | 613 | 614 | 615 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனதன, என்றும், ஆகிய, பெருமாளே, குருடி, பெருகி, குருடிமலை

