திருப்புகழ் - பாடல் 603 - திருச்செங்கோடு
ராகம் - நவரஸ
கன்னட; தாளம் - ஆதி
|
தத்ததன தான தத்ததன தான தத்ததன தான ...... தனதான |
|
புற்புதமெ னாம அற்பநிலை யாத பொய்க்குடில்கு லாவு ...... மனையாளும் புத்திரரும் வீடு மித்திரரு மான புத்திசலி யாத ...... பெருவாழ்வு நிற்பதொரு கோடி கற்பமென மாய நிட்டையுடன் வாழு ...... மடியேன்யான் நித்தநின தாளில் வைத்ததொரு காதல் நிற்கும்வகை யோத ...... நினைவாயே சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத சக்ரகதை பாணி ...... மருகோனே தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற வைத்தவொரு காழி ...... மறையோனே கற்புவழு வாது வெற்படியின் மேவு கற்றைமற வாணர் ...... கொடிகோவே கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால கற்பதரு நாடர் ...... பெருமாளே. |
நீர்க்குமிழி என்னும் பெயரோடு சிறிது காலமும் நிலைக்காத பொய்க் குடிசை போல் இருக்கும் இந்த உடலோடு குலாவுகின்ற என் மனைவியும், புதல்வர்களும், வீடும், நண்பர்களும், ஆன சூழலில் புத்தி சோர்வடையாமல், இந்த வாழ்வு பெரும் வாழ்வு, இது நிலைத்து நிற்பது ஒரு கோடி கற்ப காலம் என்று கருதும் மயக்க தியான நிலையில் வாழ்கின்ற அடியேனாகிய யான் நாள்தோறும் உனது பதத்தில் வைத்த ஒப்பற்ற அன்பானது நிலைத்து நிற்கும் வழியை உபதேசிக்க நீ நினைத்தருள வேண்டும். நாக மலையாகிய* இந்தத் திருச்செங்கோட்டுத் தலத்தின் நாதனே, மூன்று தமிழிலும் நன்கு பொழுது போக்குபவனே, சக்கரத்தையும் கதையையும் கரங்களில் ஏந்திய திருமால் மருகனே, வாது செய்து தோற்று வாயிழந்த ஊமைகளாய் நின்ற சமணர்களை மிகுந்த கழுமரங்களில் ஏறவைத்த ஒப்பற்ற சீகாழி அந்தணனாம் திருஞானசம்பந்தனே**, கற்புநிலை பிறழாது இருப்பவளும், வள்ளிமலைக்கு அடியில் கூட்டமாக வாழும் வேடர்களின் குலக்கொடியானவளுமான வள்ளியின் கணவனே, உன்னை வெறுத்த அசுரத் தலைவர்களின் நெருங்கிய குலத்துக்கு யமனே, கற்பக விருக்ஷம் உள்ள தேவநாட்டவருக்குப் பெருமாளே.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
** முருகப் பெருமானே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்பது அருணகிரிசுவாமிகளின் கருத்து.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 601 | 602 | 603 | 604 | 605 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - திருச்செங்கோடு, தத்ததன, ஒப்பற்ற, என்றும், நிலைத்து, இருப்பதால், இந்த, கோடி, வாது, பெருமாளே, வாழ்வு

