திருப்புகழ் - பாடல் 587 - திருச்செங்கோடு
ராகம் - ...;
தாளம் -
|
தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான |
|
வண்டார்ம தங்க ளுண்டேம யங்கி வந்தூரு கொண்ட ...... லதனோடும் வண்காம னம்பு தன்கால்ம டங்க வன்போர்ம லைந்த ...... விழிவேலும் கொண்டேவ ளைந்து கண்டார்தி யங்க நின்றார்கு ரும்பை ...... முலைமேவிக் கொந்தார ரும்பு நின்தாள்ம றந்து குன்றாம லுன்ற ...... னருள்தாராய் பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு பண்போனு கந்த ...... மருகோனே பண்சார நைந்து நண்போது மன்பர் பங்காகி நின்ற ...... குமரேசா செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில் நின்றாடி சிந்தை ...... மகிழ்வாழ்வே செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற செங்கோட மர்ந்த ...... பெருமாளே. |
வண்டுகள் தேனை உண்டு மயக்கத்துடன் வந்து மொய்க்கின்ற, மேகம் போன்ற, கூந்தலுடன், வளப்பம் பொருந்திய மன்மதனின் (மலர்ப்) பாணங்களின் திறனைக் குறைக்கவல்ல, வலிய போரை எதிர்த்த கண்ணாகிய வேலையும் கொண்டு வளைத்துப் போட்டு, பார்த்தவர்கள் சஞ்சலம் அடைய நிற்கின்ற விலைமாதர்களின் தென்னங் குரும்பை ஒத்த மார்பினில் மனம் பொருந்தி, பூங்கொத்துக்கள் நிரம்பத் தோன்றும் உனது திருவடியை மறந்து நான் அழிவுறாமல் உனது திருவருளைத் தந்து அருளுக. பண்டை நாள் முதலாக, சக்கரம், சங்கு இவைகளுடன் பாற்கடலில் துயில் கொள்ளும் தன்மை வாய்ந்த திருமால் மகிழும் மருகனே, இசையுடன் இணைந்து உள்ளம் நெகிழ அன்பான துதிகளை ஓதும் அடியார்களின் பக்கத்தில் நிற்கும் குமரேசனே, (அசுரர்களைச்) சிதற அடித்தும், தேவர்கள் கொண்டாடவும், கனகசபையில் நின்று கூத்தாடுகின்ற சிவபெருமான் உள்ளத்தில் மகிழவும் செய்த செல்வமே, செந்நெல் மிகுந்து வளர, மேகங்கள் சஞ்சரிக்கும் திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 585 | 586 | 587 | 588 | 589 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - திருச்செங்கோடு, தந்த, தந்தான, என்றும், இருப்பதால், சங்கு, பெருமாளே, உனது

