திருப்புகழ் - பாடல் 534 - வள்ளிமலை
ராகம் - ...; தாளம்
-
|
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த தய்யத்த தாத்த ...... தனதான |
|
கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை துள்ளிக்க னார்க்க ...... யவுகோப கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல் அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல் கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும் வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல் புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே. |
வஞ்சனை, பொய் இவைகளின் கூட்டம் நிறைந்த பை, ஓட்டைகளை உடைய மாமிசப்பை, துள்ளுகின்ற மன்மதனுடைய சேட்டைகளினால் தளர்வு, கோபம், களவு இவைகளுக்கு இருப்பிடமான தோல் பை, வேகமாக விரைந்து செல்லும் பலவித காற்றுகள் நிறைந்த பை, யமன் சூறையாடிக் கொண்டு போவதற்கு அமைந்த செத்தையாகிய பை, ஜீவாத்மா, பந்தம் இவைகளுக்கு இடமாகிய சேற்றுப் பை, ஆசை மயக்கத்துக்கு இடமாகிய பை, பாவங்களுக்கு இருப்பிடமாகிய பை, சீழ் சேருகின்ற பை, மிகுந்த தளர்ச்சி அடைந்த பை, இறைச்சி, ஈரல் முதலிய உறுப்புக்களை அள்ளி உண்பதற்கு நாய்கள் குலைத்தும், இழுத்தும் பற்களால் குதறப்படுகின்ற இந்த உடலை ஒழிக்க மாட்டேனோ? அறிவு நிறைந்த தேவயானையின் தலைவனே, (ஐராவதம் என்ற) வெள்ளை யானையை உடைய இந்திரனுக்கும், வெண்ணிறமான திருப்பாற் கடலில் உறையும் திருமாலுக்கும் மருகனே, வண்டுகள் நிறைந்த காட்டில் வசிக்கும் மலை வேடர்கள் கொல்லும் பறவைகள் உள்ள கடுமையான காட்டு வழியில் வள்ளியின் பொருட்டு வருகின்றவனே, வள்ளி அனுஷ்டித்த நன்னெறி* என்னும் உபதேசத்தை தமக்கும் சொல்லுக என்று கேட்ட தந்தையாகிய சிவபெருமானுக்கு கண்ணிமைக்கும் ஒரு க்ஷணப்** பொழுதில் அவருடைய செவியில் ஏற்றிய இளையவனே, வள்ளிக் கொடிகள் கூட்டமாய் அடர்ந்த வள்ளி மலைத்*** தினைப்புனத்தில் காவல் புரிந்த வள்ளி அம்மைக்கு (மணாளனாக) வாய்த்த பெருமாளே.
* 'வள்ளிச் சன்மார்க்கம்' என்பது யாரொருவர் தன்னை இழந்து ('யான் எனது' என்பன அற்று) தலைவனை நாடுகிறாரோ அவரை இறைவன் தானே நாடிவந்து அருள் புரிவார் என்பதாகும். இந்த 'வள்ளிச் சன்மார்க்க' நெறியை முருகன் சிவபெருமானுக்கு உபதேசித்தார்.
** வல்லை = க்ஷணம். க்ஷணப் பொழுதில் சிவனுக்கு உபதேசித்ததால், திருத்தணிகைக்கு திருக்ஷணிகை என்ற பெயரும் உண்டு.
*** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 532 | 533 | 534 | 535 | 536 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நிறைந்த, வள்ளி, தாத்த, தய்யத்த, என்ற, இந்த, பொழுதில், வள்ளிச், இடமாகிய, சிவபெருமானுக்கு, உடைய, வள்ளிக்கு, மார்க்கம், வாய்த்த, பெருமாளே, வள்ளிமலை, இவைகளுக்கு

