திருப்புகழ் - பாடல் 46 - திருச்செந்தூர்
ராகம் - ஸஹானா /
திலங்; தாளம் - ஆதி கண்டநடை - 20
|
தானனா தந்தனம் தானனா தந்தனம் தானனா தந்தனம் ...... தனதான |
|
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென் காலினார் தந்துடன் ...... கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன் சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ் சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும் தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந் தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும் ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந் தேவர்வா ழன்றுகந் ...... தமுதீயும் ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந் தாதிமா யன்றனன் ...... மருகோனே சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ் சாரலார் செந்திலம் ...... பதிவாழ்வே தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந் தாரைவே லுந்திடும் ...... பெருமாளே. |
யமனின் மிகக் கொடிய தூதர்கள் பாசக்கயிற்றால் என் மூச்சுக்காற்றுடன் சேர்த்துக் கட்டி எனது உயிரைத் தங்களுடன் கொண்டுபோக, அன்பு நிறைந்த பிள்ளைகளும், தாயார் முதலிய அனைவரும் சுடுகாடு வரை என்னுடலைப் பின்தொடர்ந்து வாய்விட்டுக் கதறி அழும் மரண அவஸ்தையை நான் அடையும் முன்பே, சூலாயுதம், வாளாயுதம், தண்டாயுதம், அழகிய சேவற்கொடி, வில் இவைகளை சூடியுள்ள புயங்களையும், அகன்ற திரு மார்பையும், புனிதமான பாதங்களையும், அவைகளில் அணிந்த தண்டையும் காண அன்புநிறை மயிலின் மீது ஏறி என்முன் வரவேண்டும். ஆலகால விஷமானது பரமசிவன்வசம் போய்ச் சேர்ந்தபின்பு, அவ்விஷத்தைக் கண்டு பயந்தோடிய தேவர்கள் உய்யும்படியாக அன்று மகிழ்ச்சியுடன் (மோகினி அவதாரம் செய்து) அமுதைத் தந்தவரும், பெரும் ஒலி உடையதான திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்பவருமான, ஆதி மூர்த்தியாகிய திருமாலின் சிறந்த மருமகனே, நெல்வயல்களில் சேர்ந்துள்ள சங்கினங்களும், தாமரைகள் சூழ்ந்து நிறைந்துள்ள தடாகங்களும் அருகே அமைந்த திருச்செந்தூர்ப் பதியில் வாழ்கின்றவனே, போர்க்களத்தில் தாவி வந்த சூரன் முன்னாளில் பயந்து வீழுமாறு வேகமாக கூரிய வேலைச் செலுத்திய பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தானனா, தந்தனம், பெருமாளே

