திருப்புகழ் - பாடல் 428 - திருவருணை
ராகம் - ....;
தாளம் -
|
தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த ...... தனதான |
|
தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து தவமொரு சத்தத் தறிந்து ...... திருநீறு கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து கதறு நிலைக்கைக் கமர்ந்த ...... எழிலோடே கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து கவலை யொழித்தற் கிரங்கி ...... யருள்வாயே அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து மமரு லகத்திற் புகுந்து ...... முயரானை அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து மறிவு ளபத்தர்க் கிரங்கு ...... மிளையோனே மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து வறிது நகைத்திட் டிருந்த ...... சிவனார்தம் மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து மறம யிலைச்சுற் றிவந்த ...... பெருமாளே. |
தலையை மொட்டை அடித்தும், காவித் துணியை இடுப்பில் அணிந்தும், சடையை வளர்த்துக் கொண்டும், புலியின் தோல் ஆடையை பெருமையாக மகிழ்ச்சியோடு அணிந்தும், சாமர்த்தியமாக புதுப்புது கலைகளைக் கற்கத் தொடங்கியும், தவம் என்பதை அந்தச் சொல்லின் சப்தமளவே அறிந்தும் (சிறிதும் தவநிலை இல்லாமல்), விபூதியை உடல் முழுக்க மிகுத்துப் பூசியும், இந்திரியங்கள் விரித்த வலைக்குள் வேண்டுமென்றே அகப்பட்டும், கதறி வேதனைப்படும் நிலைக்கு உண்டான அழகுடனே (பொன் வேண்டி) இரச வாதத்தால் பொன்னை ஆக்கித் திரிந்து சோர்வடையும் என்னைக் கொஞ்சம் கவனித்து, என் கவலையை ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள் புரிவாயாக. அலை வீசும் கடலில் மாமரமாகி நின்ற சூரனைப் பிளந்தும், அரிய கிரெளஞ்ச மலையைத் தூளாக்கியும், தேவர்கள் உலகத்தில் புகுந்தும், பெருமை வாய்ந்த தேவயானையை அருள் பாலித்து அவளைக் கைப்பற்றியும், திருவண்ணாமலையில் புகுந்து வீற்றிருந்தும், ஞானம் உள்ள பக்தர்களுக்கு இரங்கி அருள் செய்யும் இளையோனே, (மேரு) மலையை வில்லாக வளைத்து, பறக்கின்ற சக்தி வாய்ந்த திரிபுரங்களின் மீது கோபித்து, சற்றே சிரித்தவண்ணம் இருந்து (திரிபுரத்தை எரித்திட்ட) சிவபெருமானுடைய குழந்தையே, தினைப் புனத்தில் புகுந்து, அங்கே மனித உருவம் பெற்று, காதலனாகத் திரிந்து வேடர்கள் வளர்த்த மயில் போன்ற பெண்ணான வள்ளியை வளைத்து அபகரித்துக் கொண்டுவந்த பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 426 | 427 | 428 | 429 | 430 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புகுந்து, திரிந்து, தனத்தத், தனந்த, அருள், வேண்டி, வளைத்து, வாய்ந்த, அணிந்தும், மலையை, துணியை, புனைந்து, சடையை, தலையை, பெருமாளே

