திருப்புகழ் - பாடல் 413 - திருவருணை
ராகம் - ...;
தாளம் -
|
தானதன தந்ததன தானதன தந்ததன தானதன தந்ததன ...... தந்த தனதான |
|
காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே காலடர வம்பமளி மேலடர வந்துபொரு காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென ஓரிரவு வந்தெனது ...... சிந்தை யழியாதே ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய வேலையலை யும்பகையும் ...... அஞ்ச விடும்வேலா மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு வீதியிலெ ழுந்தருளி ...... நின்ற பெருமாளே. |
மேகமும், மருக்கொழுந்தின் வாசனையும் பெருகி எழும் சோலையில் உள்ள பொல்லாத குயிலாகிய எக்காளம் இடைவிடாமல் ஒலிக்கின்ற அந்தக் காரணத்தாலும், தென்றல் காற்று நெருங்கி வாசனை ஏற்றியுள்ள படுக்கையின் மேல் வேகமாக வீசுவதாலும், போருக்கு எழுந்த மன்மதன் செலுத்துவதால் மேலே படுகின்ற பாணங்களாகிய ஐந்து மலர்களாலும், ஊராரும் உலகத்தாரும் பழைய பெரிய யுகாந்த பிரளய காலம் வந்தது போல் (எனனைப் பற்றிய வசை) ஆரவாரம் செய்வதாலும், (நீ என் மீது மனம் இரங்கி) ஓர் இராப் பொழுதேனும் வந்து என் மனம் நைந்து அழியாதபடி, மாறி மாறிப் பிணங்கியும் எனது மார்பகங்களின் மீது கூடி இணங்கியும், இசைப் பாட்டுகளைப் பாடும் வண்டின் கூட்டங்கள் உலவுகின்ற கடப்ப மலர் மாலையைத் தந்து அருள்வாயாக. ஆத்தி மலரையும், பாம்பையும், பிறைச் சந்திரனையும், கங்கையையும் அணிந்துள்ள சடையராகிய ஆதி மூர்த்தியான சிவ பெருமான் தியானித்த குருநாதனே, ஆறு முகங்களும், குராமலரும், வாகனமாகிய மயிலும், குறத்தியாகிய வள்ளி அணைந்து ஆட்சி கொள்ளும் மார்பும், (ஞானச்) செல்வமும், அன்பும் உடையவனே, மேரு மலையும், பெரிய சூரனும், கிரெளஞ்ச மலையும், கரிய அலை கடலும், பகைவர்களும் பயப்படும்படி செலுத்திய வேலாயுதனே, உலகம் வணங்கும் திருவண்ணாமலையில் திகழ்கின்ற திரு வீதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக பாவித்தது போன்று அமைந்தது.குயிலின் எக்காளம், தென்றல், மன்மதன், மலர்க்கணைகள், ஊராரின் ஆரவாரம் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 411 | 412 | 413 | 414 | 415 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தானதன, தந்ததன, மீது, ஆரவாரம், மனம், மலையும், பெரிய, தென்றல், தந்த, பெருமாளே, எக்காளம், மன்மதன்

