திருப்புகழ் - பாடல் 406 - திருவருணை
ராகம் - ஆரபி ;
தாளம் - அங்கதாளம் - 10
தகதிமிதக-3, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தகதிமிதக-3, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
|
தனதனன தனந்த தானன ...... தந்ததான தனதனன தனந்த தானன ...... தந்ததான |
|
கடல்பரவு தரங்க மீதெழு ...... திங்களாலே கருதிமிக மடந்தை மார்சொல்வ ...... தந்தியாலே வடவனலை முனிந்து வீசிய ...... தென்றலாலே வயலருணையில் வஞ்சி போதந ...... லங்கலாமோ இடமுமையை மணந்த நாதரி ...... றைஞ்சும்வீரா எழுகிரிகள் பிளந்து வீழஎ ...... றிந்தவேலா அடலசுரர் கலங்கி யோடமு ...... னிந்தகோவே அரிபிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே. |
கடலில் பரவிவரும் அலைகளின் மீது தோன்றி எழும் நிலாவாலும், நினைத்து நினைத்துப் பெண்கள் தமக்குள் பேசும் வதந்தியாலும், வடவாக்கினியைக் கோபித்து சூடாக வீசும் தென்றல் காற்றாலும், வயல் சூழ்ந்த இந்தத் திருவண்ணாமலையில் உள்ள வஞ்சிக் கொடி போன்ற பெண் (உன்னைப் பிரிந்ததால்) அறிவு மயங்கி, கலங்கி வருந்தலாமோ? இடது பாகத்தில் உமாதேவியைச் சேர்த்துள்ள சிவபிரான் வணங்கும் வீரனே, ஏழு மலைகளும் பிளந்து விழும்படியாக செலுத்திய வேலாயுதனே, வலிமை வாய்ந்த அசுரர்கள் கலங்கி ஓடக் கோபித்த தலைவனே, திருமால், பிரம்மா, இந்திராதி தேவர்கள் தம்பிரானே.
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், பெண்களின் வதந்திப் பேச்சு - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 404 | 405 | 406 | 407 | 408 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கலங்கி, பிளந்து, தம்பிரானே, தந்ததான, தானன, தனதனன, தனந்த, தகிடதகதிமி

