திருப்புகழ் - பாடல் 387 - திருவருணை
ராகம் - .....;
தாளம் - ..........
|
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தநததான |
|
கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட வடதம னியகிரி கம்ப மாய்நட கணபண விபரித கந்த காளபு ...... யங்கராஜன் கயிறென அமரர நந்த கோடியு முறைமுறை யமுதுக டைந்த நாளொரு கதியற வுலகைவி ழுங்கு மேகவொ ...... ழுங்குபோல வினைமத கரிகளு மெண்டி சாமுக கிரிகளு முறுகிட அண்ட கோளகை வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு ...... நஞ்சுபோல விடுகுழை யளவும ளந்து காமுக ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ ...... ழிந்திடாதோ முனைபெற வளையஅ ணைந்த மோகர நிசிசரர் கடகமு றிந்து தூளெழ முகிலென வுருவமி ருண்ட தாருக ...... னஞ்சமீன முழுகிய திமிரத ரங்க சாகர முறையிட இமையவர் தங்க ளூர்புக முதுகிரி யுருவமு னிந்த சேவக ...... செம்பொன்மேரு அனையன கனவித சண்ட கோபுர அருணையி லுறையும ருந்து ணாமுலை அபிநவ வனிதைத ருங்கு மாரநெ ...... ருங்குமால்கொண் டடவியில் வடிவுக ரந்து போயொரு குறமகள் பிறகுதி ரிந்த காமுக அரியர பிரமபு ரந்த ராதியர் ...... தம்பிரானே. |
ஒலிக்கின்ற பாற்கடலின் உட்புறம் எல்லாம் கலக்கிக் கொண்டு வெளிப்பட, வடக்கே உள்ள பொன் மலையாகிய மேருவை மத்தாக நட்டு, விபா£தமான நாற்றமுள்ள விஷத்தைக் கொண்ட நாகராஜனாகிய வாசுகியை கடையும் கயிறாகக் கொண்டு, பல கோடி தேவர்களும் வரிசை வரிசையாக அமுதம் கடைந்த அந்த நாளில், உய்யும் வழி ஒன்றும் இல்லாத வகையில் உலகையே விழுங்க வந்த கரிய மேகத்தின் வரிசை போல எழுந்து, செயலாற்றும் மத யானைகளும், எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் சூடேறி வெந்து போக, அண்ட உருண்டைகள் யாவும் வெடிபட்டுப் போக, யாவரையும் மேலிட்டு வேல் போலப் பரந்து வரும் ஆலகால விஷம் போல, தொங்கும் குண்டலம் உள்ள செவிவரையிலும் பாய்ந்து காமம் கொண்டவர்களுடைய உயிரைக் கவர்வனவும், ஐந்து பாதகங்களுக்கும்* இடம் தருவனவுமான கண்கள் என்னும் வலையைக் கொண்ட விலைமாதர்கள் மீது காதல் மிகுவது என்னை விட்டு விலகாதோ? போர் முனையில் இடம் பெற்று வளைவாகச் சூழ்ந்து போர் ஆரவாரம் செய்யும் அசுரர்களின் சேனை முறிபட்டுப் பொடியாக, மேகம் போலக் கறுத்த உருவம் கொண்ட தாரகாசுரன் பயப்படும்படி, மீன்கள் வசிக்கின்றதும், அலை வீசுவதுமான கடல் ஓலம் இட, தேவர்கள் தங்கள் ஊர் போய்ச் சேர, பழைய (கிரவுஞ்ச) மலையில் வேல் ஊடுருவிச் செல்லும்படியாகக் கோபித்த வல்லவனே, செம் பொன் மேருமலைக்குச் சமமான பெருமை கொண்ட வலிய கோபுரங்களை உடைய திருவண்ணாமலையில் வீற்றிருக்கும், பிடித்துப் பருகுதல் இல்லாத உண்ணாமுலை அம்மை, புதியவளாகிய தேவி பார்வதி ஈன்ற குமரனே, அளவு கடந்த ஆசை கொண்டு காட்டில் உனது உண்மை வடிவத்தை மறைத்துச் சென்று, ஒப்பற்ற குறப் பெண்ணான வள்ளியின் பின்பே திரிந்த காமுகனே, திருமால், ருத்திரன், பிரமன், இந்திரன் ஆகிய தேவர்களுக்குத் தலைவனே.
விலைமாதரின் விழிகளுக்கு ஆலகால விஷத்தை உவமை சொல்லவந்த கவிஞர், முதல் ஒன்பது அடிகளில் பாற்கடலைக் கடைந்த வரலாற்றைக் கூறுகிறார்.* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 385 | 386 | 387 | 388 | 389 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனதன, கொண்ட, உள்ள, கொண்டு, தந்த, தானன, வேல், ஆலகால, இல்லாத, இடம், போர், பொன், அண்ட, காமுக, வரிசை, கடைந்த

