திருப்புகழ் - பாடல் 38 - திருச்செந்தூர்
ராகம் - மனோலயம்
- மத்யமஸ்ருதி; தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்ட நடை - 35
/4/4/4 0 - நடை தக தகிட
/4/4/4 0 - நடை தக தகிட
|
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான |
|
கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல் முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத் தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ...... பெருமாளே. |
இறுகிய கட்டுக்கோப்பாய் இருந்த அழகிய உடல் தளர்ந்துபோய், அவ்வுடலில் இருந்துகொண்டு முன்பு ஆட்டிவைத்த ஐந்து பொறிகளும் கலங்கிச் சிதறிப்போய், பிணம் என்ற நிலையை உடல் அடைந்ததும், சில பேர்கள் பிணத்தைக் கூலிக்கு எடுத்துச் சுமந்து போக, பெரிய பறைகள் முறைப்படியாக வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சம் என்ற ஓசையில் முழங்க, மக்கள் ஒன்றுகூடிப் பிணத்தைத் தொடர்ந்தும், சிலர் செல்லும் வழியிலே புரண்டும் சிலர் பிணம் செல்வதற்கு வழி விடுகின்றதுமான இந்தப் பொய்யான வாழ்வை விட்டு, உன் திருவடிகளை அடையும் வழியை நான் உணர மாட்டேனோ? பட்டு உருவிச் செல்லும்படி ஆணவம் கொண்ட உயரமான கிரெளஞ்சமலையை வேலாயுதம் பிளந்து எறிந்து, கடல் முழுதும் அலை வற்றிப்போய் குழம்பாகக் போகும்படி, கூர்மை கொண்ட வேலாயுதத்தைச் செலுத்தி, வலிமையோடு எதிர்த்த அசுரர்களின் முடி சாயும்படியாக, அடியோடு அழியும்படி வெட்டி, தலையற்ற உடல்களும், பெரிய கழுகுகளும் நடனமாடவும், ரத்தம் குளமாகப் பெருகச்செய்தும், அசுரர் கி¡£டங்களினின்று மணிகள் சிதறி விழ வைத்தும், தேவர்களுக்கு நல்ல காலம் வருவதற்கான விதையைப் பலன் கிடைக்குமாறு நீ நட்டுவைத்த திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனந்தந், தத்தத், தனந்ததன, தத்ததன, என்ற, பிணம், பெரிய, சிலர், உடல், கொண்ட, கிடஞ்சங், வெட்டவிட, வெட்டக், திருச்செந்தூர், தொடர்ந்தும், பெருமாளே

