திருப்புகழ் - பாடல் 352 - காஞ்சீபுரம்
ராகம் -
சாரங்கா; தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
|
தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த ...... தனதான |
|
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர் அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச் சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து தெரிவைமார்க் குச்சொ ரிந்து ...... அவமேயான் திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து தெளியமோ க்ஷத்தை யென்று ...... அருள்வாயே இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன் இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த இறைவர்கேட் கத்த குஞ்சொ ...... லுடையோனே குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று குருவியோட் டித்தி ரிந்த ...... தவமானைக் குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே. |
அறிவு இல்லாத பித்தர், உன் திருவடியைத் தொழாத கெட்ட வஞ்சகர், மூடர்கள், பேய்த்தன்மை கொண்ட செய்கையர், நன்றி இல்லாத பயனற்றவர் .. ஆகியோர் மீது வார்த்தைகளால் பாடல்கள் புனைந்து அவர்களைப் புகழ்ந்தும், அவர்களை வாழ்த்தியும், அதன் பொருட்டு அலைந்து திரிந்து பொருள் சம்பாதித்தும், சிறிதளவு சேகரித்த பொருளைக் கொண்டுவந்து, பொது மகளிர் வாழும் தெருக்களில் உலாவித் திரிந்து, அப் பெண்களுக்கே அந்தப் பொருளை நிரம்பவும் வாரிக் கொடுத்து இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் எனக்கு வருகின்ற அபவாதத்தை அகற்றி, அன்பு கூர்ந்து, நான் தெளிவு பெறுவதற்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்? சிவ பெருமானது மாற்றறியாத செம்பொன் வடிவம் வேறாகும்படி பிரிந்து ரிஷப வாகனத்தில் ஏறி காஞ்சீபுரத்துக்கு வந்த உமையவள் தன் அஞ்ஞான இருள் நீங்குவதற்காகத் தவம் செய்து விளங்க அந்தத் தவத்தைப் பார்த்து அருளோடு மனம் குழைந்த இறைவர் கேட்டு மகிழத்தக்கதான உபதேசச் சொல்லை உடையவனே, குறவர்களின் கூட்டத்துக்கு இடையில் வந்து, ஒரு கிழவன் வேடத்தைக் காட்டிப் புகுந்து நின்று, தினைப்புனத்தில் குருவிகளை ஓட்டித் திரிந்த தவம் நிறைந்த மானாம் வள்ளியை தன் வசப்படுத்தி, உன் சிறந்த தெய்வ வடிவம் காட்டி, அவளை மணந்தவனே, குமரக்கோட்டம்* என்ற காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* பிரமனைச் சிறைப்பிடித்த குற்றம் நீங்க, சிவபிரானின் ஆணையால், முருகன் குமரக் கோட்டத்தில் தவக்கோலம் பூண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான் - காஞ்சிப் புராணம்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 350 | 351 | 352 | 353 | 354 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தந்த, ரிந்து, தனதனாத், நான், இல்லாத, எனக்கு, திரிந்து, வடிவம், செய்து, தவம், பெருமாளே, கத்த, தித்தி, நன்றி, கெட்ட, செம்பொன், வந்த, வந்து, தகிட, நின்று

