திருப்புகழ் - பாடல் 324 - காஞ்சீபுரம்
ராகம் - கமாஸ்;
தாளம் - ஆதி - மிஸ்ரநடை - 28
நடை - தகிட தகதிமி
நடை - தகிட தகதிமி
|
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான |
|
எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப் பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் ...... குடில்மாயம் எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப் பிறக்கைக்குத் தலத்திற்புக் ...... கிடியாமுன் தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற் பெறச்செச்சைப் புயத்தொப்பித் ...... தணிவோனே செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித் திரட்டப்பிக் கழற்செப்பத் ...... திறல்தாராய் பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப் பணத்துட்கக் கடற்றுட்கப் ...... பொரும்வேலா பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப் பலிப்பப்பத் தருக்கொப்பித் ...... தருள்வாழ்வே கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக் கிடைப்புக்குக் களிப்புக்குத் ...... திரிவோனே கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. |
எனக்குக் கொஞ்சம், உனக்குக் கொஞ்சம் என்று கூச்சல் இடுகின்ற அந்த விலைமாதர்களுக்கு விரும்பும் பொருளைத் தங்கத் தட்டில் வைத்துத் தருகின்ற ஆபத்தைக் கொண்ட இந்த உடம்பு உயிர் மாயமாய் மறைந்ததும் விறகுக்கட்டைகளுக்கு இடையிலே வைக்கப்பட்டு நெருப்பால் சுடப்பட்டு மறைந்து போவதற்கும் மீண்டும் உயிர் பிறப்பதற்கும், இந்த உலகில் புகுந்து அழிந்து போவதற்கும் முன்னரே, - (* பின் தொடர்கிறது). தினைப்புனத்தில், அழகிய மழலைமொழி பேசும் குறப்பெண்ணாகிய கிளி போன்ற வள்ளியின் மார்பை அழகு பெற உன் வெட்சி மாலையணிந்த புயத்தில் ஏற்றுக் கொண்டு தழுவுவோனே, (* முன் தொடர்ச்சி) - அகந்தை கொண்டு, சற்றுக் கோபித்துப் பேசுபவர்களும், நன்னெறியிலிருந்து தவறியவர்களுமான துஷ்டர்களிடமிருந்து தப்பி, அந்தக் கூட்டத்தினின்று விலகி, உன் திருவடியைப் புகழும் ஆற்றலைத் தந்தருள்வாயாக. பனைமரம் போன்ற தும்பிக்கை உடையவனும், கொக்குப் போன்று காத்திருந்து தாக்கும் குணத்தை உடையவனுமான தாரகாசுரனை, தடைபட்டு அழியுமாறு வேலினால் குத்தி அவன் இறந்து படவும், ஆதிசேஷனின் ஆயிரம் பட முடிகள் அஞ்சிடவும், கடல் அஞ்சிடவும் போர் செய்த வேலனே, பேராசையின்றி, லோபத்தனம் இன்றி, நடுக்கம் இன்றி, மயக்கம் ஒழிந்து, இத்தகைய நலன்கள் உண்டாகும்படியாக அடியார்களுக்கு ஏற்படுத்தித் தந்து அருள் புரியும் செல்வமே, (சிவபெருமானிடமிருந்து) கனி பெறுவதற்காக திக்குக்கள் யாவும் படர்ந்த உலகத்தைச் சுற்ற, பச்சைநிறமுள்ள பெருமைவாய்ந்த பக்ஷியாகும் மயிலின் மீது ஏறி அமர்ந்து மகிழ்ச்சியுடன் வலம் வந்தவனே, இந்தக் கலியுகத்தில் நிகரில்லாத தெய்வமாய் நின்று, கொஞ்சமும் சலிக்காது மோக்ஷ இன்பத்தைத் தர ஒப்புக்கொண்டவனே, எழில்மிகு சக்தியாகிய காமாக்ஷிதேவி எழுந்தருளியுள்ள, கடல்போல் எப்போதும் ஓம் என்று ஒலிக்கும் கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 322 | 323 | 324 | 325 | 326 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனத்தத்தத், போன்ற, கொண்டு, அஞ்சிடவும், இன்றி, அழகிய, உயிர், பெருமாளே, கொஞ்சம், என்று, இந்த, போவதற்கும்

