திருப்புகழ் - பாடல் 32 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம்
-
|
தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன ...... தனதான |
|
இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட இணைசிலை நெரிந்தெ ழுந்திட ...... அணைமீதே இருளள கபந்தி வஞ்சியி லிருகலை யுடன்கு லைந்திட இதழமு தருந்த சிங்கியின் ...... மனமாய முருகொடு கலந்த சந்தனஅளருப டுகுங்கு மங்கமழ் முலைமுக டுகொண்டெ ழுந்தொறு ...... முருகார முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு முகடியு நலம்பி றந்திட ...... அருள்வாயே எரிவிட நிமிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு மிதழியொ டணிந்த சங்கரர் ...... களிகூரும் இமவரை தருங்க ருங்குயில் மரகத நிறந்த ருங்கிளி யெனதுயி ரெனுந்த்ரி யம்பகி ...... பெருவாழ்வே அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக ளணிமணி சதங்கை கொஞ்சிட ...... மயில்மேலே அகமகிழ் வுகொண்டு சந்ததம் வருகும ரமுன்றி லின்புறம் அலைபொரு தசெந்தில் தங்கிய ...... பெருமாளே. |
காதுகளில் விளங்கும் இரண்டு குண்டலங்களையும் தாக்குகின்ற கெண்டை மீன் போன்ற கண்கள் ஒப்பற்ற குமிழம் மலர் போன்ற நாசியை நெருங்கி வந்திடவும், இரண்டு வில் போன்ற புருவங்களும் நெரிந்து மேல் எழுந்திடவும், படுக்கையின் மேல் இருண்ட கரிய கூந்தல் கற்றையும், கொடி போன்ற இடையைச் சுற்றிய பெரிய ஆடையும் குலைந்திடவும், இதழ் அமுதத்தை உண்ணும் நஞ்சில் என் மனம் அழிந்து அழியவும், நறு மணத்துடன் கலந்த சந்தனச் சேற்றுடன் குங்குமம் மணக்கும் மார்பின் உச்சி விம்மிப் பூரித்து எழுந்தோறும் அழகு நிரம்ப, முழு நிலாப் போன்ற திலகம் இட்டுக் கொண்டுள்ள விலைமாதர்களுடன் கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக. நெருப்பைப் போல் ஒளி விட்டு நிமிர்ந்த சடையில் சந்திரனுடன் எழுந்த கங்கை நதியும், கொன்றையுடன் தரித்த சிவபெருமான் மகிழ்ச்சி மிகக் கொள்ளும் இமய மலையரசன் பெற்ற கரிய குயில், பச்சை நிறம் கொண்ட கிளி, எனது உயிர் என்று நான் போற்றும் மூன்று கண்களை உடையவள் ஆகிய பார்வதி பெற்ற செல்வமே, அரையில் கட்டிய பொன்வடம், ஒலிக்கின்ற கிண்கிணி, சிலம்பு, நெருங்கியுள்ள தண்டைகள், அழகிய மணியாலாகிய சதங்கை இவை எல்லாம் கொஞ்ச, மயிலின் மேல் உள்ளம் பூரித்து எப்போதும் வருகின்ற குமரனே, முற்புறத்தில் அலைகள் வந்து மோதுகின்ற கரையுடைய திருச்செந்தூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போன்ற, மேல், தந்தன, தனந்த, தனதன, கரிய, பெற்ற, இரண்டு, பூரித்து, சதங்கை, கலந்த, நிமிர்ந்த, கிண்கிணி, திருச்செந்தூர், பெருமாளே

