திருப்புகழ் - பாடல் 214 - சுவாமி மலை
ராகம் - பிலஹரி;
தாளம் - மிஸ்ரசாபு
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
|
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான |
|
குமர குருபர முருக சரவண குகசண் முககரி ...... பிறகான குழக சிவசுத சிவய நமவென குரவ னருள்குரு ...... மணியேயென் றமுத இமையவர் திமிர்த மிடுகட லதென அநுதின ...... முனையோதும் அமலை அடியவர் கொடிய வினைகொடு மபய மிடுகுர ...... லறியாயோ திமிர எழுகட லுலக முறிபட திசைகள் பொடிபட ...... வருசூரர் சிகர முடியுடல் புவியில் விழவுயிர் திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல் நதிகொள் சடையினர் ...... குருநாதா நளின குருமலை மருவி யமர்தரு நவிலு மறைபுகழ் ...... பெருமாளே. |
குமரா, குருபரா, முருகா, சரவணா, குகா, சண்முகா, யானைமுகக் கணபதிக்குப் பின்பிறந்த இளையோய், சிவ குமாரனே, சிவாயநம என்னும் பஞ்சாட்சரத்துக்குக் குருவான சிவன் அருளிய குருமணியே என்றெல்லாம், அமிர்தத்தை தேவர்கள் கடைந்திட்ட கடல் ஓசைபோல், நாள்தோறும் உன்னை வாயாரப் பாடி ஆரவாரத்துடன் துதிக்கும் அடியார்கள் தமது கொடிய வினைகள் நீங்குவதற்காக அபயம் என்று ஓலமிடும் குரலொலி உனக்குக் கேட்கவில்லையோ? இருண்ட ஏழு கடல்களும் உலகங்களும் அழிய, எட்டுத்திசைகளும் பொடிபட, போருக்கு வந்த சூரர்களின் குடுமியும் உடலும் விழ, அவர்களின் உயிரைக் கவர்ந்து போரிட்ட வேல் வீரா, யமனின் உயிரை எடுத்த நெருப்பை ஒத்த அடியும்*, கங்கைநதியைத் தாங்கிய சடையும் உடைய சிவனின் குருநாதா, தாமரை நிறைந்த சுவாமிமலையில் பொருந்தி அமர்ந்தோனே, ஓதும் வேதங்கள் புகழும் பெருமாளே.
* மார்க்கண்டேயனுக்காக யமனது உயிரை சிவபெருமான் காலால் உதைத்து எடுத்த காலபைரவ மூர்த்திக் கோலத்தை திருக்கடையூரில் காணலாம்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 212 | 213 | 214 | 215 | 216 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனதன, உயிரை, எடுத்த, பெருமாளே, குருநாதா, கொடிய, பொடிபட

