திருப்புகழ் - பாடல் 198 - பழநி
ராகம் - ....; தாளம் -
|
தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன ...... தனதான |
|
விதமி சைந்தினி தாமலர் மாலைகள் குழல ணிந்தநு ராகமு மேசொலி விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி ...... யழகாக விரிகு ரும்பைக ளாமென வீறிய கனக சம்ப்ரம மேருவ தாமதி விரக மொங்கிய மாமுலை யாலெதி ...... ரமர்நாடி இதமி சைந்தன மாமென வேயின நடைந டந்தனர் வீதியி லேவர எவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் ...... வலையாலே எனது சிந்தையும் வாடிவி டாவகை அருள்பு ரிந்தழ காகிய தாமரை இருப தங்களி னாலெனை யாள்வது ...... மொருநாளே மதமி சைந்தெதி ரேபொரு சூரனை யுடலி ரண்டுகு றாய்விழ வேசின வடிவு தங்கிய வேலினை யேவிய ...... அதிதீரா மதுர இன்சொலி மாதுமை நாரணி கவுரி யம்பிகை யாமளை பார்வதி மவுந சுந்தரி காரணி யோகினி ...... சிறுவோனே பதமி சைந்தெழு லோகமு மேவலம் நொடியில் வந்திடு மாமயில் மீதொரு பவனி வந்தக்ரு பாகர சேவக ...... விறல்வீரா பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும் வடிவு கொண்டருள் காசியின் மீறிய பழநி யங்கிரி மீதினில் மேவிய ...... பெருமாளே. |
பல விதங்களில் ஆசைப்பட்டு இனிதாக மலர் மாலைகளை கூந்தலில் அணிந்து, காமப் பற்றான பேச்சுக்களைப் பேசி, தமது விவேகத்தைச் சொல்லியும், சிறப்புக்களைச் சொல்லியும், அழகாக விரிந்து வளர்ந்த தென்னங் குரும்பைகளாம் என்னும்படி ஓங்கி வளர்ந்த, பொன் மயமான, நிறைந்த மேரு மலை போல, மிக்க காமம் பொதிந்து ஓங்கிய, அழகிய மார்பகங்களைக் கொண்டு முன்னுள்ளவர் விருப்பத்தை நிறைவேற்ற காமப் போரை விரும்பி, இன்பத்துடன் அன்னப் பறவை போல விதம் விதமான நடை நடப்பவராய் (வேசையர்) தெருவில் வர, எல்லோருடைய உள்ளமும் காம மயக்கத்தைக் கொள்ளச்செய்யும் விலைமாதர்களின் (கண் என்னும்) வலையால் என் மனமும் வாடிப் போகாத வகைக்கு, அருள் பாலித்து அழகான தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகளால் என்னை ஆட்கொள்ளுவதும் ஒரு நாள் நடக்குமோ? ஆணவம் மிக்கு எதிரில் வந்து சண்டை செய்த சூரனை உடல் இரண்டு கூறாக விழும்படிச் செய்த, கோபமான உருவத்தைக் கொண்ட, வேலாயுதத்தைச் செலுத்திய மிக்க வலிமை வாய்ந்தவனே, இனிமை வாய்ந்த சொல்லை உடைய உமாதேவி, நாராயணி, கெளரி, அம்பிகை, சியாமள நிறத்தினள், பார்வதி, மோன நிலையில் உள்ள அழகி, ஜகத்காரணி, யோகினி ஆகிய பல நாமஙளைக் கொண்ட தேவியின் சிறுவனே, ஏற்ற சமயத்தில் ஏழு உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்த சிறந்த மயிலின் மேல் ஒப்பற்ற திருவுலா வந்த கிருபாகரனே, வலிமையாளனே, வெற்றி வீரனே, சூரியனின் ஒளி கோடிக்கணக்கானதாம் என்னும் பிரகாசமான திருவுருவத்தைக் கொண்டு அருள்பவனே, (வாரணாசி என்னும்) காசித் தலத்திலும் சிறந்த பழனி என்னும் அழகிய மலைமீது வீற்றிருக்கும் பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 196 | 197 | 198 | 199 | 200 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தானன, என்னும், தந்தன, கொண்டு, அழகிய, இரண்டு, கொண்ட, சிறந்த, வந்த, மிக்க, செய்த, சொல்லியும், வடிவு, சூரனை, தாமரை, பார்வதி, யோகினி, பழநி, காமப், பெருமாளே, வளர்ந்த

