திருப்புகழ் - பாடல் 159 - பழநி
ராகம் - ஹம்ஸநாதம்; தாளம் -
ஆதி
|
தான தனதனன தான தனதனன தான தனதனன ...... தனதான |
|
சீற லசடன்வினை காரன் முறைமையிலி தீமை புரிகபடி ...... பவநோயே தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங் கூறு மொழியதுபொய் யான கொடுமையுள கோள னறிவிலியு ...... னடிபேணாக் கூள னெனினுமெனை நீயு னடியரொடு கூடும் வகைமையருள் ...... புரிவாயே மாறு படுமவுணர் மாள அமர்பொருது வாகை யுளமவுலி ...... புனைவோனே மாக முகடதிர வீ சு சிறைமயிலை வாசி யெனவுடைய ...... முருகோனே வீறு கலிசைவரு சேவ கனதிதய மேவு மொருபெருமை ...... யுடையோனே வீரை யுறைகுமர தீர தரபழநி வேல இமையவர்கள் ...... பெருமாளே. |
சீறி விழும் சினத்தை உடைய கீழ்மகன், தீவினைகளைச் செய்கின்றவன், ஒழுக்கம் இல்லாதவன், பாவங்களைச் செய்கின்ற வஞ்சகன், பிறவிநோயையே தேடுகின்ற தன்மையுடையவன், பெருமை, நீதி, நெறி, நேர்மை, சிறப்பு என்ற நல்ல குணங்கள் ஒரு சிறிதும் இல்லாதவன், எல்லோருடனும் பொய்யையே பேசித் திரியும் கொடுமையே கொண்ட தீயவன், அறிவில்லாதவன், உனது திருவடிகளைப் பணியாத குப்பை போன்றவன், இப்படிப்பட்டவனாக இருப்பினும் என்னை நீ உன் அடியார்களுடைய திருக்கூட்டத்தில் கூட்டி வைக்கும்படியான வழியைத் தந்து அருள்வாயாக. நீதி நெறியினின்று மாறுபட்ட அசுரர்கள் மாண்டு போகப் போர் செய்து, வெற்றியோடு கூடிய மகுடத்தைத் தரித்தவனே, அண்டத்தின் உச்சி அதிரும்படியாக இறக்கைகளை வீசிப் பறக்கும் மயிலை குதிரையைப் போல வாகனமாக உடைய முருகப் பெருமானே, புகழ் பெற்ற கலிசை* என்ற ஊரில் வாழ்ந்த மன்னனது உள்ளத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற பெருமை உடையவனே, வீரை* என்ற திருத்தலத்தில் வாழ்கின்ற குமார ஸ்வாமியே, ¨தரியம் உடையவனே, பழனியில் எழுந்தருளிய வேலாயுதனே, தேவர்கள் வணங்கும் பெருமாளே.
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர்.இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைத் தலத்தில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 157 | 158 | 159 | 160 | 161 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்ற, நீதி, தனதனன, உடையவனே, பெருமை, உடைய, பெருமாளே, பழநி, இல்லாதவன்

