திருப்புகழ் - பாடல் 135 - பழநி
ராகம் - ....; தாளம் -
|
தனன தானன தானா தானா தனன தானன தானா தானா தனன தானன தானா தானா ...... தனதான |
|
கலக வாள்விழி வேலோ சேலோ மதுர வாய்மொழி தேனோ பாலோ கரிய வார்குழல் காரோ கானோ ...... துவரோவாய் களமு நீள்கமு கோதோள் வேயோ உதர மானது மாலேர் பாயோ களப வார்முலை மேரோ கோடோ ...... இடைதானும் இழைய தோமலர் வேதா வானோ னெழுதி னானிலை யோவாய் பேசீ ரிதென மோனமி னாரே பா¡£ ...... ரெனமாதர் இருகண் மாயையி லேமூழ் காதே யுனது காவிய நூலா ராய்வே னிடர்ப டாதருள் வாழ்வே நீயே ...... தரவேணும் அலைவி லாதுயர் வானோ ரானோர் நிலைமை யேகுறி வேலா சீலா அடியர் பாலரு ளீவாய் நீபார் ...... மணிமார்பா அழகு லாவுவி சாகா வாகா ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா ரயலு லாவிய சீலா கோலா ...... கலவீரா வலபை கேள்வர்பி னானாய் கானார் குறவர் மாதும ணாளா நாளார் வனச மேல்வரு தேவா மூவா ...... மயில்வாழ்வே மதுர ஞானவி நோதா நாதா பழநி மேவுகு மாரா தீரா மயுர வாகன தேவா வானோர் ...... பெருமாளே. |
கலகத்தை விளைவிக்கின்ற ஒளி பெற்ற கண்கள் வேலாயுதமோ, சேல் மீனோ? இனிய வாய்ச் சொல் தேனோ, பாலோ? கரு நிறமான நீண்ட கூந்தல் மேகமோ, காடோ? வாய் பவளமோ? கழுத்து நீண்ட பாக்கு மரமோ? தோள் மூங்கிலோ? வயிறானது திருமால் பள்ளி கொண்ட அழகிய ஆல் இலையோ? சந்தனக் கலவை பூசிய கச்சணிந்த மார்பகம் மேரு மலையோ, யானைத் தந்தமோ? இடைதான் நூலோ, தாமரை மேல் வீற்றிருக்கும் பிரம தேவன் இடையை எழுதவில்லையோ? வாய் திறந்து பேசுங்கள். இது என்ன மெளனம் சாதிக்கின்றீர்கள், மின் போன்ற பெண்மணிகளே பாருங்கள், என்று பேசி விலைமாதர்களுடைய இரண்டு கண்கள் என்னும் மாயைக் கடலில் முழுகாமல், உன்னுடைய பிரபந்த நூல்களை ஆராய்வேன். இடர்கள் எவையும் என்னைப் பீடிக்காத வகையில் உனது திருவருள் நிறைந்த வாழ்வைத் தந்தருள வேண்டும். அலைச்சல் இல்லாத வண்ணம், உயர்வு பெற்ற தேவர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் வேலனே, ஒழுக்கம் நிறைந்தவனே, அடியார்களுக்குத் திருவருள் பாலிப்பவனே, கடப்ப மாலை அணிந்த அழகிய மார்பனே, அழகு பொலியும் முருகக் கடவுளே, கம்பீரம் நிறைந்த (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட மின்னலை ஒத்த தேவயானை மகிழ்கின்ற கணவனே, உன்னைப் பணிந்து தாழ்பவர்களுடைய அருகிலே உலாவும் சீலனே, ஆடம்பர வீரனே, வல்லபையின் கணவராகிய விநாயகருடைய தம்பியே, காட்டில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, புதிய தாமரை மீது எழுந்தருளி உள்ள தேவனே*, முதுமை இல்லாத மயிலின் செல்வமே, இனிய ஞான வழிகளில் பொழுது போக்கும் நாதனே, பழனி மலையில் வீற்றிருக்கும் குமாரனே, தீரனே, மயில் வாகன தேவனே, தேவர்களின் பெருமாளே.
* முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் அழகிய தாமரை மலர் மீது அழகே ஒரு வடிவாய் குழந்தை உருவாகத் தோன்றி அருளினார் என்பதைக் குறிக்கும்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 133 | 134 | 135 | 136 | 137 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தானா, தாமரை, அழகிய, தானன, வீற்றிருக்கும், நீண்ட, திருவருள், வாய், இல்லாத, மீது, கணவனே, தேவர்களின், இனிய, நிறைந்த, பெற்ற, வானோ, பாலோ, தேனோ, மதுர, சீலா, அழகு, பழநி, பெருமாளே, வாகன, தேவா, கண்கள்

