திருப்புகழ் - பாடல் 128 - பழநி
ராகம் - தேஷ்; தாளம் -
அங்கதாளம் - 5 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
|
தனன தனத்த தாதத தனன தனத்த தானன தனன தனத்த தானன ...... தனதான |
|
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய கனதன மொத்த மேனியு ...... முகமாறும் அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும் அரவு பிடித்த தோகையு ...... முலகேழும் அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபிந வபத்ம பாதமு ...... மறவேனே இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு ரணமு கசுத்த வீரிய ...... குணமான இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர் பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே. |
நற்கதியை அடையமுடியாதபடி தடுக்கின்ற பொதுமகளிரின் புதிய ரத்னாபரணங்களை அனிந்துள்ள பெருமார்பாகிய மலைமேல் மோகம் மிக்க கொண்டதனால் கவலை கொண்ட மனத்தினனாக நான் இருந்த போதிலும், உனது சிறப்பான புகழ்பெற்ற தங்கநிதி போன்ற திருமேனியையும் (1), ஆறு திருமுகங்களையும் (2) மிகுந்த வலிமை பொருந்திய தோள்களையும் (3) கூரிய நுனியை உடைய வெற்றி வேலினையும் (4) பாம்பினைக் கால்களில் பிடித்துள்ள கலாப மயிலையும் (5) ஏழுலகங்களும் அதிரும்படியாக கொக்கரிக்கும் கோழியையும் (6) உன்னடியார்கள் வாழ்த்தி வணங்கி வாழ்வு பெறும் புதிய தாமரை மலர் போன்ற திருவடிகளையும் (7) ஒருபோதும் மறக்கமாட்டேன். சூரிய அம்சமாக வந்த சுக்¡£வன் ரஜோகுணத்தை மேற்கொண்டு (வாலியை) எதிர்த்து, தோற்று நின்ற கொடிய போர்க்களத்தில், சுத்த வீரியம் வாய்ந்த குணத்தினனாகிய தம்பி சுக்¡£வனுக்கு உதவி, அவன்பெரிய அரசாட்சியைப் பெற்று வாழுமாறு அன்புடன் அருளிய ராகவனின் மருமகனே, பதினோரு ருத்திரர்களின்* பிரகாசம் விளங்கும் கோவிலில் அன்போடு எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரனே, தேவலோகத்தில் உள்ள வாசம் மிகு கற்பக விருட்சங்கள் இருக்கும் காட்டில் வரிகளை உடைய வண்டுகள் மொய்ப்பதால் கற்பக மலர்கள் உதிர்கின்ற பழநி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
இப்பாடல் மிக அருமையானது. முருகனது அத்தனை உறுப்புக்களையும் தொகுத்து அளிக்கும் பாட்டு.(1) திருமேனி, (2) ஆறு முகங்கள், (3) தோள்கள், (4) வேல், (5) மயில், (6) கோழி, (7) திருவடிகள்.
* 11 ருத்திரர்கள் பின்வருமாறு: மஹாதேவன், ஹரன், ருத்திரன், சங்கரன், நீலலோஹிதன், ஈசான்யன், விஜயன், வீமதேவன், பவோத்பவன், கபாலி, ஸெளம்யன்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 126 | 127 | 128 | 129 | 130 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனத்த, புதிய, பழநி, போன்ற, உடைய, கற்பக, பெருமாளே, கவலை, தகதிமி, தானன, உனது

