திருப்புகழ் - பாடல் 1267 - பொதுப்பாடல்கள்
ராகம் -
...; தாளம் -
|
தத்தனா தத்ததன தத்தனா தத்ததன தத்தனா தத்ததன ...... தனதான |
|
மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை விக்கும்வாழ் நர்க்குமிக ...... மனதூடே மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம் வைத்துவா டச்சமனு ...... முறமேவித் திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி திக்கஆ விக்களவு ...... தெரியாமுன் சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது சித்ரபா தக்கமல ...... மருள்வாயே இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை யிட்டுயோ கத்தமரு ...... மிறையோர்முன் எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத லெட்டொணா வித்தைதனை ...... யினிதீவாய் பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு பத்தர்பா டற்குருகு ...... முருகோனே பக்கம் யானைத்திருவொ டொக்கவா ழக்குறவர் பச்சைமா னுக்கினிய ...... பெருமாளே. |
நான் பெற்ற மக்களுக்கும், என் தாயாருக்கும், மருமகப் பிள்ளைகளுக்கும், மாமன்மார்களுக்கும், மனையாளுக்கும், உடன் வாழ்பவர்களுக்கும், மிகவும் மனத்தில் வருத்தம் தந்து, கரு நிறம் கொண்ட கடலைக் காட்டிலும் பெரிதாயுள்ள மாயை காரணமாக வரும் துன்பத்தை உண்டாக்கி மனம் சோர்வு அடைய, யமனும் இருக்கும் இடத்தைத் தேடி அடைந்து, கரு நிறமான எருமைக் கடாவின் மீது முறுக்குடன் வந்து என் சொற்களைக் குழற வைக்க, என் உயிர் உடலில் தங்கும் கால அளவு தெரிவதற்கு முன்பாக (அதாவது நான் சற்று நேரத்தில் இறப்பதற்குமுன்), மனம் நீங்கி ஒடுக்கம் உற்று, நனவும் கனவும் அற்று நான் வாழ்வதற்கு, நீ சற்று உனது அழகிய திருவடித் தாமரைகளை அருள்வாயாக. கரும்பு வில்லைக் கொண்ட மன்மதனை, கருகும்படி மூன்றாவதாகிய (நெற்றிக்) கண் கொண்டு அவனது (காமத்தை மூட்டும்) செயலை ஆராய்ந்து (அவன் மீது) நெருப்பை ஏவி, யோகத்தில் அமர்ந்த சிவபெருமானுடைய முன்னிலையில், இயங்குகின்ற உயிர்கள் முதலிய யாவற்றிலும் பொருந்தி நிற்பவராகிய மாயோனாகிய திருமால் முதலானோர்களுக்கும் எட்ட முடியாத ஞானப் பொருளை நன்கு உபதேசித்தவனே, உன்பால் ஆசையுடன் உள்ளம் நெகிழ்ந்து விரும்பிப் போற்றும் பக்தர்களின் பாடல்களுக்கு மனம் உருகும் முருகனே. உனது (இடது) பக்கத்தில் தேவயானையாகிய லக்ஷ்மியின் மகளோடு பொருந்தி வாழ்கின்றவளும், அந்தக் குறவர்களால் வளர்க்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட மான் போன்றவளுமாகிய வள்ளிக்கு இனிய பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1265 | 1266 | 1267 | 1268 | 1269 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தத்தனா, மனம், நான், கொண்ட, தத்ததன, உனது, பொருந்தி, சற்று, மீது, பெருமாளே, நிறம்

