திருப்புகழ் - பாடல் 1231 - பொதுப்பாடல்கள்
ராகம் -
...; தாளம் -
|
தனன தந்த தத்தான தனன தந்த தத்தான தனன தந்த தத்தான ...... தனதான |
|
களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர களப துங்க வித்தார ...... முலைமீதே கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு கவிதெ ரிந்து கற்பார்கள் ...... சிலர்தாமே உளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான உனையு ணர்ந்து கத்தூரி ...... மணநாறும் உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி யுருகி நெஞ்சு சற்றோதி ...... லிழிவாமோ அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்¡£வ அரசு டன்க டற்றூளி ...... யெழவேபோய் அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்¡£வ மறவொ ரம்பு தொட்டார்த ...... மருகோனே வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை வனசர் கொம்பி னைத்தேடி ...... யொருவேட வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில் மறவர் குன்றி னிற்போன ...... பெருமாளே. |
வஞ்சக எண்ணம் கொண்டு கையில் உள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, பச்சைக் கற்பூரம் கலவைச் சாந்துடன் விளங்கும் உயர்ந்து பரந்த மார்பகத்தைக் காட்டி, புணர்ச்சி இன்பம் விற்பவர்களாகிய விலைமாதர்களின் அங்க உறுப்புக்களைப் பாடும் பாடல்களைத் தெரிந்து கற்பவர்களாகிய சில மக்கள் தம்முடைய மனம் நெகிழ்ச்சி உற்று பேசும் பயனற்ற பேச்சுக்களைப் பேசாமல், உண்மைப் பொருளான உன்னை அறிந்து கஸ்தூரியின் நறுமணம் வீசும் இரண்டு தாமரை போன்ற திருவடிகளில் அடைக்கலம் என்று உன்னைப் புகழ்ந்து பாடி மனம் உருகி, சிறிது நேரம் உன்னைத் துதித்தால் ஏதேனும் இழிவு ஏற்பட்டு விடுமோ? கணக்கிட முடியாத வன்மை வாய்ந்த குரங்குப் படைகள் பரந்து சூழ்ந்து வர சுக்¡£வன் என்னும் குரங்கு அரசனுடன் கடல் தூசி படும்படி சென்று, பகைக்கு இடமாயிருந்த இலங்கை நகரை சுட்டுப் போர் புரிந்து அரக்கனாகிய இராவணனுடைய பத்துக் கழுத்தும், (தலைகளும்) அற்று விழ ஓர் ஒப்பற்ற அம்பைச் செலுத்தியவரான ராமனின் (திருமாலின்) மருகனே, வளர்நதுள்ள மந்தாரம் போன்ற மரங்கள் சூழ்ந்த, பாலைக்கு முன் நின்ற முல்லையும் குறிஞ்சியும் (காடும், மலையும்) கொண்ட நிலத்தின் கண் வேடர்கள் பெண்ணான வள்ளியைத் தேடி, ஒப்பற்ற வேடர் வடிவத்தைப் பூண்டு, மோகப் பித்துடன் உள்ளம் உருகி, (வெய்யிலில்) மிகவும் வேடூதல் உற்று, வேடர்கள் வாழும் (வள்ளி)மலையிடத்தே சென்ற பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1229 | 1230 | 1231 | 1232 | 1233 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கொண்டு, தத்தான, தந்த, உருகி, போன்ற, வேடர்கள், உற்று, ஒப்பற்ற, தெரிந்து, சத்தான, யுருகி, பெருமாளே, மனம்

