திருப்புகழ் - பாடல் 1223 - பொதுப்பாடல்கள்
ராகம் -
...; தாளம் -
|
தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத் ...... தனதானம் |
|
எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத் திரண்டுகண் பட்டிட் ...... டிளையோர்நெஞ் சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட் டிணங்குபொன் செப்புத் ...... தனமாதர் அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற் றணைந்துபின் பற்றற் ...... றகல்மாயத் தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட் டலைந்தலைந் தெய்த்திட் ...... டுழல்வேனோ பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத் துடன்பெருங் கைக்குட் ...... படவாரிப் பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க் கிதஞ்செய்தொன் றத்திக் ...... கிளையோனே தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச் சலம்பிளந் தெற்றிப் ...... பொருசூரத் தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத் தடிந்திடுஞ் சொக்கப் ...... பெருமாளே. |
வெளித் தோன்றி எழுகின்றதும், கவர்ச்சி தருவதுமான, செழுமை வாய்ந்த, தென்னங் குரும்பைக்கு இணையாகி, இளைஞர்களின் இரண்டு கண்களும் படுவதாகி அந்த இளையோர்களின் மனம் அதன் மேல் வெகுவாக ஈடுபடச் செய்து, தாவி, உள்ளம் இளகி, சலனப்படுவதற்கு இடம் கொடுப்பதான அழகிய குடம் போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர்கள். உருவழியக் கூடிய அங்கங்களின் மேல் மனம் உருகுதல் உற்று, நிரம்ப காம ஆசை கொண்டவனாய் அவர்களை அணைந்து, பிறகு அந்த ஆசை அற்று நீங்குவதான மாய வாழ்க்கையில் வருந்துவதான நெஞ்சத்தைக் கொண்டு, கொதிப்புறும் மனப் புண்ணைக் கொண்டவனாய், மிகவும் அலைச்சல் உற்று இளைப்பு எய்தித் திரிவேனோ? பழ வகைகளையும், மிக்க இனிப்பைக் கொண்ட கரும்பு அப்பம் இவைகளையும் பெரிய தும்பிக்கையில் உட்கொள்ளும்படி வாரி, அகன்று வெளித் தோன்றும் தொப்பைக்குள் உண்டு, முன்னதாகவே அடியார்களுக்கு நன்மை பொருந்தி விளங்கும் யானை முக விநாயகருக்குத் தம்பியே, செழிப்புற்று வெளித் தோன்றி திரண்ட விசாலமான இடங்களைக் கவர்ந்து மூடி, கடல் நீரைக் கிழித்து மோதிச் சண்டைக்கு நின்ற சூரனாகிய அந்த மிகப் பெரிய மாமரத்தைப் பின் தொடர்ந்து, அது இருந்த இடத்தை அணுகிச் சென்று வெட்டி அழித்த அழகிய பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1221 | 1222 | 1223 | 1224 | 1225 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனந்தனந், வெளித், அந்த, தத்தத், உற்று, கொண்டவனாய், பெரிய, அழகிய, மனம், பட்டிட், தோன்றி, பெருமாளே, மேல்

