திருப்புகழ் - பாடல் 1206 - பொதுப்பாடல்கள்
ராகம் -
...; தாளம் -
|
தனன தானனம் தனன தானனம் தனன தானனம் ...... தனதான |
|
அயில்வி லோசனங் குவிய வாசகம் பதற ஆனனங் ...... குறுவேர்வுற் றளக பாரமுங் குலைய மேல்விழுந் ததர பானமுண் ...... டியல்மாதர் சயில பாரகுங் குமப யோதரந் தழுவு மாதரந் ...... தமியேனால் தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந் தருண பாதமுந் ...... தரவேணும் கயிலை யாளியுங் குலிச பாணியுங் கமல யோனியும் ...... புயகேசன் கணப ணாமுகங் கிழிய மோதுவெங் கருட வாகனந் ...... தனிலேறும் புயலி லேகரும் பரவ வானிலும் புணரி மீதுனுங் ...... கிரிமீதும் பொருநி சாசரன் தனது மார்பினும் புதைய வேல்விடும் ...... பெருமாளே. |
வேல் போன்ற கண்கள் குவியவும், பேச்சு பதறவும், முகத்தில் சிறு வேர்வை துளிர்க்கவும், இறுகக் கட்டியிருந்த கூந்தல் பாரம் கலையவும், மேல் விழுந்து வாயிதழ் ஊறலைப் பருகி, அழகிய வேசியர்களின் மலை போன்று கனத்த, குங்குமம் கொண்ட மார்பகங்களைத் தழுவ வேண்டும் என்கின்ற ஆசை அடியேனால் நீக்க முடியாததாய் இருக்கின்றது. (இவ்வாசையை நீக்க) உனது கருணை மிக்குள்ள இளமை பொலியும் திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும். கயிலைக்குத் தலைவனான சிவபெருமானும், வஜ்ராயுத கரத்தனான இந்திரனும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரமனும், பாம்புகளுக்குத் தலைவனான ஆதிசேஷனுடைய கூட்டமான படங்களின் முகம் அறும்படி மோத வல்ல கொடிய கருட வாகனத்தின் மேல் ஏறும் மேக வண்ணனாம் திருமாலும், தேவர்களும் போற்ற, ஆகாயத்திலும், கடல் மீதும், மலை மீதும் இருந்து சண்டை செய்யும் அசுரனாகிய சூரன் மார்பிலே புதைந்து அழுந்தும்படி வேலைச் செலுத்திய பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1204 | 1205 | 1206 | 1207 | 1208 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தானனம், நீக்க, தலைவனான, மீதும், வேண்டும், மேல், கருணை, கருட, பெருமாளே

