திருப்புகழ் - பாடல் 1174 - பொதுப்பாடல்கள்
ராகம் -
..... ; தாளம் -
|
தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த ...... தனதான |
|
பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து பலபல யோகத் திருந்து ...... மதராசன் பரிமள பாணத் தயர்ந்து பனைமட லூர்தற் கிசைந்து பரிதவி யாமெத்த நொந்து ...... மயல்கூர அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி யவர்விழி பாணத்து நெஞ்ச ...... மறைபோய்நின் றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்ற னருள்வச மோஇப்ர மந்தெ ...... ரிகிலேனே எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை யெனவொரு ஞானக் குருந்த ...... ருளமேவும் இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து இரணியன் மார்பைப் பிளந்த ...... தனியாண்மை பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த புளகப டீரக் குரும்பை ...... யுடன்மேவும் புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து புனமிசை யோடிப் புகுந்த ...... பெருமாளே. |
குற்றம் இல்லாத நல்ல வகையில் கல்விகளை ஓதியும், உலக ஆசைகளைக் கடந்தும், உட்பகையாக வரும் இரண்டு வினைகளை முற்றும் உதறி விலக்கியும், பல வகையான யோக மார்க்கங்களை அநுஷ்டித்து இருந்தும், மன்மத ராஜனான காமனுடைய நறு மணம் வீசும் பாணங்களால் மனக் கவலையும் சோர்வும் கொண்டு, பனை மடலால் செய்த குதிரையில் ஏறுதற்கும் இணங்கி* பரிதவித்து, மிகவும் மனம் நொந்து, காம இச்சை மிகுதிப்பட, அன்பு போல் நடித்து மிகவும் அழுது, விரும்புவது போலக் கண்களால் அபிநயிக்கும் விலைமாதர்களின் மேல் ஆசை வைத்து, அவர்களுடைய கண்களாகிய அம்பினால் உள்ளம் குமைந்து நின்று அழிந்துபோவது, நான் முன்பு செய்த விதியின் விளைவோ? அல்லது உன்னுடைய திருவருளின் கூத்தோ? இந்த மயக்கத்தின் காரணம் எனக்கு விளங்கவில்லையே? யாராலும் எழுதுவதற்கு முடியாத வேதத்தில் மாத்திரம் அல்லாமல், மற்று எல்லாப் பொருள்களிலும் விளங்கி நிற்கும் எம்பெருமான் என்று கூறிய ஒப்பற்ற ஞானக் குழந்தையாகிய பிரகலாதருடைய உள்ளத்தில் வீற்றிருப்பவரும், மனிதன், சிங்கம் என இரண்டு உருவம் அமைந்த (நரசிம்ம) மூர்த்தியாய்த் துலங்கித் தோன்றி, ஒரு பெரிய தூணில் விளக்கம் உற்று எழுந்து, இரணியனின் மார்பைப் பிளந்த ஒப்பற்ற வீரத்தை, பிரகலாதன் வேண்டிய அந்தப் பொழுதிலேயே உடன்பட்டுக் காட்டிய வலிமைசாலியானவரும் ஆகிய திருமாலின் மருகனே, திரிபுரத்தை எரித்த சிவபெருமானுக்கு மைந்தனே, புளகாங்கிதம் கொண்டதும், சந்தனம் பூசியதும், தென்னங்குரும்பை போன்ற இள மார்பு விளங்கியவளும், மேகமும், யானையும் வாழ்கின்ற வள்ளி மலையின் வேடர் குலத்து மான் போன்றவளுமான வள்ளியின் மீது தீராக்காதல் பூண்டு, அவள் காத்துவந்த தினைப்புனத்தில் ஓடிப்புகுந்து நின்ற பெருமாளே.
* மடல் எழுதுதல்:தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர்.முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1172 | 1173 | 1174 | 1175 | 1176 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனதன, மணம், தனந்த, தானத், மிகவும், ஒப்பற்ற, தலைவியின், எழுதி, செய்த, மடல், பெருமாளே, நொந்து, ஞானக், மார்பைப், பிளந்த, இரண்டு

