திருப்புகழ் - பாடல் 1136 - பொதுப்பாடல்கள்
ராகம் -
..... ; தாளம் -
|
தனதன தானா தானா தனதன தானா தானா தனதன தானா தானா ...... தனதான |
|
இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ எமன்விடு தூதோ மானோ ...... விடமீதோ எனவிழி கூறா வாரா அரிவையர் தோளூ டாடா இறுதியில் வேறாய் மாறா ...... நினைவாலே பலபல கோளாய் மாலா யுழலும தானால் வீணே படிறுசொ லாகா லோகா ...... யதனாகிப் பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதே பணிதியில் மூழ்கா மாயா ...... விடுவேனோ அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடா அவுணரை வாடா போடா ...... எனலாகி அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலே யவருடல் வாணா ளீரா ...... எதிராகி மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலா மகபதி வாழ்வே சேயே ...... மயில்வீரா மறைதொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே வளவிய வேளே மேலோர் ...... பெருமாளே. |
விளங்குகின்ற வேலாயுதமோ, சேல் மீனோ, தாமரையோ, யமன் அனுப்பியுள்ள தூதோ, மானோ, நஞ்சு தானோ இது என்று வியக்கக்கூடிய கண்களால் பேசும்படி வருகின்ற விலைமாதர்களின் தோள்களில் ஈடுபட்டுத் திளைத்து, கடைசியாக மனம் வேறுபட்டு, மாறுபட்ட எண்ணத்தால் பலபல தீமைகள் உண்டாக, மோகத்துடன் அலைச்சல் உறுகின்றதாக என் அனுபவம் ஆனதால், வீணான வஞ்சனைச் சொற்களைப் பேசி (யாருக்கும்) ஆகாத உலகாயதனாகி, அன்புடன் நாட்டிலும் வீட்டிலும் பயனடையாமல் அடிமையாகிய நானும் செல்வச் செருக்கில் முழுகி இறந்து படுவேனோ? அலை வீசும் கடல் கோகோ கோகோ என்று கூச்சலிட்டு, ஓடும் அசுரர்களை வாடா போடா என்று அறை கூறிப் போருக்கு அழைப்பதாகி, அழகிய வேலாலும் வாளாலும், ஒளி விடுகின்ற சிறு கத்தியாலும், அந்த அசுரர்களின் உடலையும் வாழ் நாளையும் முடியும்படி எதிர்த்துப் பிளந்த மலை போன்ற பெரிய தோள்களை உடைய ஞான சொரூபனே, அழகான பாலாம்பிகையின் குழந்தையே, இந்திரனுடைய செல்வமே, இறைவனின் சேயே, மயில் வீரனே, வேதங்கள் தொழுகின்ற நாயகனே, தேவனே, நறு மணம் வீசும் மலரே, உயிர்களுக்கு ஆதாரமான தண்ணீரே, செழுமை வாய்ந்த செவ்வேளே, அறிவிலே பெரியவர்களின் பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1134 | 1135 | 1136 | 1137 | 1138 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தானா, கோகோ, தனதன, அழகிய, என்று, சேயே, வீசும், பெருமாளே, வாடா, மானோ, கூறா, பலபல, தூதோ, போடா

