திருப்புகழ் - பாடல் 111 - பழநி
ராகம் - ....; தாளம் -
|
தனதனா தனதத்த தனதனா தனதத்த தனதனா தனதத்த ...... தனதான |
|
அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு ளறிவுதா னறவைத்து ...... விலைபேசி அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை யதிகமா வுதவிக்கை ...... வளையாலே உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ ளுலையிலே மெழுகொத்த ...... மடவாரோ டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து ஒழியுமா றொருமுத்தி ...... தரவேணும் மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி மயிலனாள் புணர்செச்சை ...... மணிமார்பா மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க மயிலிலே றியவுக்ர ...... வடிவேலா பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி பரமர்பா லுறைசத்தி ...... யெமதாயி பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற பழநிமா மலையுற்ற ...... பெருமாளே. |
அறவழி இல்லாத தொழிலைக் கற்று, கொடுமை பூண்ட வேலைப் போல் கூரிய கண்ணைச் செலுத்தி, உள்ளத்தில் அறிவு என்பதை நீக்கி, விலை பேசி, படுக்கையின் மேல் சேர்த்து, தமது பவளம் போன்ற சிவந்த வாய் அமுதத்தை அதிகமாகத் தந்து, உறவு கூறிக் கொண்டு, வளைக் கையாலே உடலை இறுகத் தழுவிக் கொண்டு, உலையில் இட்ட மெழுகு போல் உருக்கம் காட்டும் விலைமாதர்களோடு கூடி உருகி வருகின்ற ஒழுக்கம், காம நாடகம் என்கின்ற பித்த மயக்கம் என்னை விட்டுத் தொலையுமாறு ஒப்பற்ற முக்தி இன்பத்தைத் தரவேண்டும். வேடர் குலத்து மாது, ஒப்பற்ற பரிசுத்தமான, தாமரையில் வாழும் லக்ஷ்மியாகிய மயில் போன்றவளாம் வள்ளியைத் தழுவுகின்ற வெட்சி மாலை புனைந்த அழகிய மார்பனே, திகைத்து மயங்கி நின்ற அசுரன் மலை போல உருகி விழும்படி, சிறந்த மயில் மீது ஏறிய கொடுமையான வடிவேலனே, பறைகளை விரும்பும் ருத்ரி, கரிய மேகம் போன்ற கூந்தலை உடையவள், பரமராகிய சிவபெருமான் பக்கத்தில் உறைகின்ற சக்தி, எமது தாய், பழம்பொருளாக நிற்கும் பார்வதி, துர்க்கை, பெரிய நாயகி* என்னும் பெயரை உடையவள் ஈன்ற, பழனி மா மலையில் வீற்றிருக்கும், பெருமாளே.
* பழநிமலை அடிவாரத்தின் மேற்கேயுள்ள தலத்தில் எழுந்தருளியுள்ள தேவியின் பெயர் பெரிய நாயகி ஆகும்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 109 | 110 | 111 | 112 | 113 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனதனா, தனதத்த, மயில், பெரிய, ஒப்பற்ற, உடையவள், கொண்டு, பெருமாளே, போல், போன்ற, உருகி

