திருப்புகழ் - பாடல் 1072 - பொதுப்பாடல்கள்
ராகம் -
வஸந்தா
தாளம் - சதுஸ்ர அட - 12
தாளம் - சதுஸ்ர அட - 12
| தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான |
|
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ...... முறுகேளும் இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் ...... வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நிலையென ...... மகிழாதே விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ...... அருள்வாயே குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் ...... மணவாளா திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு ...... புலவோனே சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே. |
நான் வசிக்கும் வீடும், நான் கொஞ்சிப் பழகும் குழந்தைகளும், என்னைச் சுற்றி அமைந்த உறவினரும், என் மனதிற்கு உகந்த ஊரும், என் மனைவி முதலிய பெண்களும், எனது இளமையும், செல்வம் நிறைந்து விரிந்து பரந்த எனது நாடும், இந்நாட்டின் மலைகளும் நிலைத்திருக்கும் என்றெண்ணி நான் மகிழாமல் ஒளிதரும் விளக்குகளை ஏற்றி உன்னை வழிபட எனக்கு நீ அருள்வாயாக. குருந்த* மரத்தில் ஏறியவனும் மேகவண்ணனுமான திருமாலின் மருமகனே, குரங்குகள் உலாவும் குன்றாகிய வள்ளிமலையில் வாசம் செய்யும் குறமகள் வள்ளியின் மணவாளனே, திருத்தமான முறையில் வேதத்தை இன்பமான தமிழ்மொழியில் தேவாரமாக உலகோர் அறியத் தந்தருளிய (சம்பந்தப்) புலவனே, செம்மை வாய்ந்த திருவடியும் அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமாளே.
* கோபியரின் சேலைகளைக் கவர்ந்து ஒளிக்க, கண்ணன் யமுனைக் கரையில் குருந்த மரத்தின் மீது ஏறினான்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1070 | 1071 | 1072 | 1073 | 1074 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நான், எனது, பெருமாளே, குறமகள், வழிபட

