கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
|
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ் சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங் கந்தா இளங்குமரா அமராவதி காவலனே. |
79 |
பந்து விளையாடும் பெண்களின் சிவந்த கயல் மீன் போன்ற கண் நோக்கில் அடியேன் அகப்பட்டு உழல்கின்ற மனோ வியாகூலத்தைப் போக்கி அருள்புரிவீராக, செம்மையான வேலாயுதத்தைத் தாங்கிய திருமுருகப் பெருமானே! பூங்கொத்துக்கள் நிறைந்த கடப்பமரங்கள் சூழ்ந்திருக்கின்ற திருத்தணிகை மலை மீது நிலைபெற்றிருக்கும் கந்தக்கடவுளே, என்றும் அகலாத இளம்பருவத்தினை உடைய குமரக்கடவுளே, வானுலகத்தின் தலைநகராகிய அமராவதியைக் காத்தருள்பவரே!.
|
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னே தோகைப் புரவியிற் றோன்நிற் பாய்சுத்த நித்தமுத்தித் த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. |
80 |
ஆகாயத்தை முட்டி வருகின்ற நெடிய இயமன் அடியேனின் இறுதிக் காலத்தில் வருவான் ஆயின், அடியேனுக்கு முன்பாக குதிரையையொத்த தோகையையுடைய மயிலின் மீது தேவரீர் ஏறி வந்து அடியேனுக்கு முன்பாக நின்று திருவருள்புரிவீர். தூய்மையானதும் என்றும் அழியாததுமான முக்தியை வழங்கும் கொடைத் தன்மையுடைய மலையைப்போன்றவரும் முப்புரத்தை எரித்தவரும் மூன்று கண்களை உடையவருமான சிவபெருமானை தம் வலப்பக்கத்தில் வைத்திருக்கும் மேலான கல்யாண குணங்களுடைய உமாதேவியாரின் திருமைந்தரே!.
|
தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால் ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற் கட்டுஞ் சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே. |
81 |
நட்சத்திரக் கூட்டம் என்கின்ற செவிலித் தாய்கள் ஆறு பேரும் தந்த முலைப் பாலையுண்டது போதாமல் உமாதேவியாரின் திருமுலைப் பாலையும் உண்டருளிய பாலகனாகிய திருமுருகப்பெருமானின் திருவரையில் கட்டிக் கொள்ளும் உடைவாளும், திருக்கரத்தில் ஏந்தியுள்ள சிறுவாளும் வேலாயுதமும் அடியேனின் சிந்தையில் குடி கொண்டிருக்கின்றன; ஆதலால், இயமனே, என்னிடம் வாராது நீங்கிப் போவாயாக, மீறி வந்தால் உன் உயிரை வாங்கிவிடுவேன்!.
|
தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே புகட்டிப் பணியப் பணித்தரு ளாய்புண்ட ரீகனண்ட முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டவெட்டிப் பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே. |
82 |
இலைகளோடு கூடிய சிவந்த நிறமுள்ள கடப்ப மலர்களாலான மாலையையும் அடியேனின் மனத்தையும் தேவரீருடைய இரு திருவடிகளிலேயே சேர்த்து வைத்து வணங்குமாறு அடியேனுக்குக் கட்டளையிட்டு அருள்வீராக! தாமரை மலர் மீது வீற்றிருக்கும் பிரம்ம தேவனது உலகத்தின் வாயிலைப் பிளந்து அதுவரை ஓங்கி நின்ற அமராவதியாகிய இந்திரலோகத்தை முட்டும் படி எட்டிச்சென்று ஆண் யானைபோல் போர் புரிந்த கொடூரமான குணமுடைய சூரபன்மனுக்கு பயங்கரமானவரே!.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சிவந்த, அடியேனின், மீது, சிறுவாளும், பிளந்து, உமாதேவியாரின், அடியேனுக்கு, முட்டி, என்றும், முன்பாக

