இலக்கியக் கட்டுரைகள் - நிலமென்னும் நல்லாள்
- ஜெயஸ்ரீ
இயற்கை கொஞ்சும் கிராமங்களை நகர்ப்புறக் குழந்தைகள் பார்ப்பதற்கு இப்போது வழியில்லாமல் போய்விட்டது. தொலைக்காட்சியிலோ, சினிமாக்களிலோதான் கிராமங்களின் மாதிரிகளைக் காண்பிக்க வேண்டியிருக்கிறது. பச்சைப் புல்வெளிகள், தலையாட்டும் நெற்கதிர்கள் நிறைந்த வயல் வெளிகள், உய்ங் என்று வண்டு ரீங்காரமிடும் மூங்கில் காடுகள் ஆகியவற்றைத் தேடி எங்காவது அலையத்தான் வேண்டியதாயிருக்கிறது.
கிராமம் போய்ப் பார்க்க வேண்டும் என்று கெஞ்சிய குழந்தைகளுடன் நகரை அடுத்த கிராமம் ஒன்றிற்குச் செல்ல நேர்ந்தது. போகும் வழியிலேயே பெரிய வளைவுப் பலகை ஒன்று வரவேற்றது. அப்பகுதியில் வயல்களை அழித்து, செப்பனிட்டு, சீராக்கி, பாகம் பிரித்து, மனைகளாக ஆக்கி விற்பனை செய்வதற்கான ஏற்பாட்டின் வரவேற்புப் பலகைதான் அது.
அந்த இடத்திற்குள் நுழைந்தவுடன் குழந்தைகள் விளையாடத் தொடங்கி விட்டார்கள். நடுநடுவே, ஆண்டுக்கணக்கில் வேரோடிய தென்னை மர வேர்கள் குழந்தைகளின் கால்களைத் தடுக்க, இது விளையாட்டு மைதானமில்லையா அம்மா? என்று கேட்டு, பதிலுக்காகக் காத்திருந்தார்கள். குழந்தைகளுக்கு அந்த இடம் பற்றி - அது என்னவாயிருந்தது, ஏன் இப்படி மாறிப்போனது, இன்னும் கொஞ்ச நாளில் என்ன ஆகும் என்று நெஞ்சம் கனக்கச் சொல்ல வேண்டியதாயிற்று.
அந்த இடம் ஒரு காலத்தில் பசுமை கொஞ்சும் வயலாக இருந்தது. தென்னை மரங்கள் அரணாக நின்றன. அதன் சொச்சங்களாய் இப்போதும் வேலியாய் நிற்கும் சில தென்னை மரங்கள்! தென்னந்தோப்பாய் இருந்ததற்கான சாட்சியாய் இன்னும் அழியாத வேர்கள்! அவ்வளவு பெரிய நிலப்பரப்பில் வயலும் மரங்களும் அழிக்கப்பட்டு, லட்சக் கணக்கில் விலை போகும் மனைகளாக்கப்பட்டிருக்கின்றன.
மக்கள் தொகை 10 சதவீதம் உயர்ந்தால், உணவு உற்பத்தி 15 சதவீதம் உயர வேண்டும். ஆனால், தற்போது நம் நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப உணவு உற்பத்தி இல்லை. கிராமங்களில் சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைமை கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.
இன்று விவசாயத்தின் வீழ்ச்சியைச் சந்திக்க முடியாமல் நகரங்களை நோக்கி மக்கள் வேலை தேடிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். விவசாயம் செய்யத் தகுதி வாய்ந்த நிலங்களோ, இப்படி மனைகளாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பசுமையாகத் தலையாட்டும் மரங்களுக்குப் பதிலாக, தலையில் ஆன்டெனா பூச் செருகிக் கொண்டு சிமெண்ட் கட்டடங்கள் பெருகி நிற்கின்றன.
போட்டி போட்டுக்கொண்டு கடனை அள்ளி வழங்க நிதி நிறுவனங்களும் வங்கிகளும் வரிசையில் காத்து நிற்கின்றன. வீடு கட்டவும் கார் வாங்கவும் அளிக்கப்படும் கடன் மீதான வட்டி 9.5 சதவீதமாக இருக்கும்போது, விவசாயத்திற்கென அளிக்கப்படும் கடன் மீதான வட்டி 11.5 முதல் 14 சதவீதம் வரையாக இருக்கிறது.
வாயைக் கட்டி, வயிற்றைக்கட்டி எப்படியேனும் வீடு கட்டி விடவேண்டும் என்பதே இப்போதைய நடுத்தர வர்க்கத்தினரின் கனவாயிருக்கிறது. இவற்றின் விளைவுதான் வயல்கள் அழிக்கப்பட்டு, மனைகளாக ஆக்கப்படுகின்றன.
இப்படி வயல்களும் தோப்புகளும் அழிக்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. சிமெண்டும் ஜல்லியும் அதிகமாக, அதிகமாக அப்பகுதியில் மீதமிருக்கும் விளைநிலங்களும் தங்கள் விளைச்சல் தன்மையை, வளத்தை இழக்கின்றன. தொடர்ந்து நிலங்கள் அழிக்கப்படுவதால் நம்மிடம் ஒரு கட்டத்தில் விளை நிலங்களே இல்லாமற் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது!
தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று வரம் வாங்கிக்கொண்ட ஒருவன், வீட்டில் போய் மகிழ்ச்சியோடு மனைவியை ஆரத்தழுவி விஷயத்தைத் சொல்லமுயல்வான்; மனைவி பொன்னாய்ச் சமைந்திடுவாள். ஐயோ, என்று நொந்து கொண்டு பசி மேலீட்டால் உணவில் கை வைத்தவுடன் அதுவும் பொன்னாகிவிடும். அவன் வாங்கிய வரத்தின் பயன் என்ன? பசிக்கு உணவும் அன்பு செய்ய மனைவியும் இல்லை. இக்கதை போலத்தான் நம் எதிர்காலமும் இருக்கப்போகிறதோ! வீடு மேல் மாடி கட்டி நாம் குடியிருப்போம் - உண்ண உணவும் குடிக்க நீரும் இன்றி!
மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கும்; மழை அதிகமாகப் பொழியும் என்று புத்தகத்தில் படிப்பதெல்லாம் என்ன ஆகும்மா என்ற குழந்தையின் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. நிலமென்னும் நல்லாளின் நகைப்பொலிதான் கேட்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலமென்னும் நல்லாள் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - சதவீதம், இல்லை, வீடு, கட்டி, அழிக்கப்பட்டு, மரங்கள், அந்த, தென்னை, இப்படி, என்ன, வேண்டும்

