வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 98
குரூரமான செயல்களைக் குறைத்துக் கொண்டனர். இது மட்டுமல்ல, நாளடைவில் அசுரர்களின் அநேக பழக்க வழக்கங்கள் ஆரியர்களிடையே பரவத் தொடங்கின. வட்சு நதிப் பிரதேசத்திலிருந்து முன்னேறி வரும் ஆரிய பரம்பரையின் ஞானத்தின் சிகரம் மகரிஷி அங்கிரா. ஆரியர்கள், தங்களுடைய எல்லா நடவடிக்கைகளிலும் புனிதமான சுத்த ஆரியத்துவத்தின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென்பது ஞானி அங்கிராவின் விருப்பம். இதனாலேயே அநேக காரணங்களால் தடுக்கப்பட்டிருந்த குதிரை மாமிச உணவை, மறுபடியும் ஆரியர்களிடையே புகுத்தி அதற்காகவே குதிரைகளை வளர்க்கும் பழக்கத்தையும் தூண்டினார். அவருடைய ஆரிய அபிமானம், அறிவுத் திறமை, யுத்தக் கலையின் நிபுணத்துவம், இவற்றின் புகழ் வெகு தூரம் வரை பரவி இருந்தது. தூர தூரத்திலிருந்து ஆரிய குமாரர்கள் இவரிடம் கலைகள் பயில்வதற்காகக் காந்தாரத்திற்கு வரத் தொடங்கினர். காந்தாரப் பிரதேசத்தில் ஞானி அங்கிரா அப்பொழுது போட்ட அந்த அறிவுச் சிறு விதை, ‘தட்ச சீலம்’ என்ற உருவத்தில் பெரிய மரமாக வளர்ந்து, அதன் நிழலையும் இனிய
கனிகளையும் அனுபவிப்பதற்காக, உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அறிவுத்தாகம் கொண்ட மாணவர்களை இழுத்து வருமென்று அப்பொழுது யார் நினைத்திருக்க முடியும்?
ஞானி அங்கிராவிற்கு வயது அறுபத்தைந்து. அவருடைய வெண்மையான கேசமும் தொப்புள்வரை தொங்கி ஆடிக் கொண்டிருக்கும் வெண்மை நிறத் தாடியும் அவருடைய கம்பீரமான முகத்தோற்றமும், யாரையும் ஆகர்ஷிக்கும் சக்தி வாய்ந்ததாயிருந்தன. பேனா, மை அல்லது ஓலை, எழுத்தாணி முதலியவைகள் உபயோகத்தில் வருவதற்கு இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகள் இருக்கின்றன. வாய்மொழியாகவே, அவர் மாணவர்களுக்குப் போதித்து வந்தார். அவற்றில் பழைய பாடல்களையும், கவிதைகளையும் மாணவர்கள் திரும்பத் திரும்பப் பாடி ஞாபகம் செய்து கொள்வார்கள். வெகு தூரத்திலிருந்து வந்திருக்கும் மாணவர்களின் உணவு, உடை இவைகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. ஞானி அங்கிரா, தன்னுடைய பிதுரார்ஜித நிலங்களோடு கூட, மாணவர்களைக் கொண்டு காடுகளை வெட்டி நிலமாக்கி, அவற்றிலிருந்து வருஷம் பூராவுக்கும் போதுமான கோதுமை முதலிய தான்யம் விளைவிக்க ஏற்பாடு செய்தார். பழத் தோட்டங்கள் வைத்து உற்பத்தி செய்யும் பழக்கம் அப்பொழுது கிடையாது. ஆனால் பழங்கள் பழுக்கும் காலத்தில் தன்னுடைய மாணவர்களுடன் வனத்தில் சென்று பழங்களைச் சேகரித்துக் கொள்வார். நிலங்களில் வெள்ளாண்மை செய்யும் காலங்களிலும் பழங்கள் சேகரிக்க காடுகளுக்குச் செல்லும் போதும் மகரிஷியும் அவரது மாணவர்களும் வட்சுநதிக் கரையிலும் சுவாத நதிக் கரையிலும் ஆரியர்களால் செய்யப்பட்ட கீதங்களை மிகப் பிரியத்தோடு பாடுவார்கள். இந்தக் காந்தாரப் பிரதேசங்கள் முழுவதிலும், மகரிஷி அங்கிராவின் குதிரை லாயம்தான் மிகப்பெரியதும் பிரசித்தமானதும் ஆகும். அவர் தொலைதூரத்திலிருந்து தன்னுடைய மாணவர்கள் மூலமாயும், தெரிந்தவர்கள் மூலமாயும் நல்ல ஜாதிக் குதிரையைத் தேடிக்கொண்டு வரச்செய்து வளர்ப்பதோடு, அதன் வம்சங்களையும் அதிகமாக விருத்தி செய்தார். பிற்காலத்தில் ‘சிந்து நதிப் பிரதேசக் குதிரைகள்’ என்று எங்கும் புகழப்பட்ட புரவிகளின் ஆதி சிருஷ்டி ஞானி
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 96 | 97 | 98 | 99 | 100 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞானி, தன்னுடைய, அப்பொழுது, அவருடைய, ஆரிய, அங்கிரா - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

