வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 68
மேய்ந்து கொண்டு திரிகின்றன; அவைகளின் இளங்கன்றுகள் குதித்து விளையாடிக்கொண்டிருக்கின்றன. இந்த வனப்பு மிக்க பூமியைப் பார்ப்பதனால்தான் அந்த மத்ர விருத்தர், “மனிதன் ஒரே இடத்திலேயே இருப்பதற்காகப் படைக்கப்படவில்லை” என்று அடிக்கடி கூறுகிறார். பெரிய கிழவருடைய குடிசை இந்த மாதம் இங்கே இருக்கும்; புற்கள் குறைந்தவுடனே வேறு இடத்திற்குப் போய்விடும். பால், தயிர், வெண்ணெய், மாமிசம் இவை இங்கு ஏராளம். குடிசைக்குள்ளே எங்கு பார்த்தாலும் இந்தப் பொருள்களே நிறைந்திருக்கின்றன. பதினைந்து அல்லது இருபது தினங்களுக்கு ஒரு முறை, கிராமத்திலிருந்து இங்கு வந்து வெண்ணெய், மாமிசம் இவற்றைக் கொண்டு போவார்கள். பனிக்காலத்தில், இங்கு அதிகமாகப் பனி பெய்யும். அந்தக்
காலத்திலுங்கூட இங்கேயே தங்கி இருப்பதில்தான் கிழவருக்கு விருப்பம். ஆனால் ஆடு, மாடுகளும், குதிரைகளும் பனிக்கட்டிகளைத் தின்று ஜீவிக்க முடியாதல்லவா! ஆனதால் கீழே சமவெளிப் பிரதேசத்திலுள்ள கிராமத்திற்கு இவைகள் கொண்டு போகப்படும். பெரியவர் மட்டும் அப்பொழுது வழியிலிருக்கும் காட்டுப் பிரதேசங்களில் இங்குமங்குமாகத் தங்கி விடுவார். கிராமத்தின் பெயரைக் கேட்டாலே அவருக்கு ஒரே வெறுப்பு.
ரோசனாவும், புருகூதனும், பெரியவர் குடிசையை அடைந்த போது, பகல்பொழுது இன்னும் பாக்கி இருந்தது.
சாமான்களை இறக்கிவிட்டு இவர்கள் அமர்ந்ததும்; கிழவர் வேடிக்கை செய்து கொண்டே குதிரைப் பால் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை எடுத்து, இவர்கள் இருவருக்கும் முன்னே வைத்தார். பாலைக் கொஞ்சம் அருந்தியதுமே இவர்களுக்குப் பயணத்தால் ஏற்பட்டிருந்த களைப்பெல்லாம் பறந்து விட்டது. அன்று மாலையில் சில கன்றுகளை ஓட்டிக்கொண்டு கிராமத்திலிருந்து ரோசனாவினுடைய சகோதர சகோதரிகளும் வேறு சில சிறுவர்களும் இங்கு வந்து சேர்ந்தனர். அன்று முழுவதும் ரோசனா பெரியவரிடம் புருகூதனுடைய குழல் வாசிப்பைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பதிலேயே மூழ்கியிருக்கும் கிழவர், இனி புருகூதனைச் சும்மாவிடுவாரா? அங்குள்ள எல்லா வாலிபர்களுக்குமே குழல் வாத்தியமென்றால் ரொம்பப் பிரியம். அன்று இரவு நடந்த நாட்டியத்திலும், புருகூதன் தன்னுடைய சாமர்த்தியத்தைப் புலப்படுத்தினான்.
மறுநாள் காலையில், புருகூதன் தன் பயணத்தைத் துவக்க விரும்பினான். அந்தப் பழங்கிழவர் அத்தனை சுலபமாக விட்டுவிடுவாரா? பகல் உணவிற்குப் பிறகு கிழவர் தமது பழங்கதையைத் துவக்கினார். அவர் கதையைத் துவங்குவதற்குக் காரணப் பொருளாய் அமைந்தது புருகூதன் கொண்டு வந்த செம்புப் பாத்திரம்.
“இந்தத் தாமிரத்தையும், நெல் வயல்களையும் பார்த்தாலே என் நெஞ்சம் எரிகிறது! வட்சு நதிக்கரைக்கு இந்தப் பொருள்கள் வந்ததிலிருந்து தான், பாவமும் அதர்மமும் பெருகிவிட்டன. தேவதைகளுக்குக் கூடக் கோபம்; எங்கு பார்த்தாலும் அம்மை வியாதி; இவை மட்டுமா? ஏராளமாகக் கொலையும், குத்து வெட்டும்.
“அப்படியானால் - தாத்தா, இந்தப் பொருள்கள் அந்தக் காலத்தில்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொண்டு, இங்கு, புருகூதன், அன்று, இந்தப், கிழவர் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

