வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 55
செய்வார்கள்? வாத்தியங்கள் ஒலிக்க, மதுவிலும் மங்கையர் மையலிலும் மூழ்கிக் கிடக்கும் வாலிபர்களுக்கு, இந்த எண்ணம் எங்கே இருக்கப் போகிறது! பகல் முடிந்தது. இரவு வந்து வெகு நேரமாகி விட்டது. ஆனால் களியாட்டமும் நடனமும் இன்னும் முடிந்த பாடில்லை. இந்த நேரத்தில் இவர்களுடைய நாய்கள் உரத்த குரலில் குரைத்துக் கொண்டு நதிக்கரையை நோக்கி ஓடின. அமிர்தாஸ்வனும் இந்தக் களியாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தான் என்பதைக் கூறத் தேவை இல்லை. ஆனால் அவன் தன் நினைவிழந்து தடுமாறும் அளவுக்குக் குடிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவனல்ல. நாய்கள் குரைப்பதைக் கேட்ட அமிர்தாஸ்வன் கூட்டத்தைவிட்டு மெதுவாக எழுந்தான். வயிரம் பாய்ந்த மரத்தால் செய்த தன்னுடைய பெரிய கதாயுதத்தைக் கையிலேந்தி நாய்களின் சப்தம் வந்த நதிக் கரையை நோக்கி நடந்தான். நல்ல நிலவு பிரகாசிக்கிறது. இந்த நிலவொளியிலே ஒரு பெண் எதிரே வருவதைப் பார்த்த அமிர்தாஸ்வன் சற்றே நின்றான். நதிக்கரைப் பக்கமிருந்து தனிமையாக, ஆனால் வேகமாக ஓடி வந்த மதுரா, கோபத்தில் துடிக்கும் குரலில்,
“புரு குலத்தோர் நம்முடைய மாடுகளையும், குதிரைகளையும் ஓட்டிக்கொண்டு செல்கின்றனர்” என்றாள்.
“ஓட்டிக்கொண்டு செல்கிறார்களா? நம்முடைய வாலிபர்களெல்லோரும் மதுவெறியில் மூழ்கிக் கிடக்கிறார்கள். மதுரா! நீ எதுவரை சென்றாய்?”
“அவர்கள் யார் என்று நான் தெரிந்துகொள்ளக் கூடிய அளவு சென்றேன்.”
“எல்லா மிருகங்களையுமா ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள்?”
“ஆங்காங்கு மேய்ந்த மிருகங்களை ஒன்றுசேர்ப்பதில் அவர்கள் நீண்ட நேரத்தைச் செலவு செய்திருப்பதாய்த் தெரிகிறது.”
“மதுரா! உன்னுடைய அபிப்பிராயம் என்ன?”
“தாமதம் செய்வது கூடாது”.
“நம்முடைய வாலிபர்கள் எல்லாம் குடி மயக்கத்தில் கிடக்கிறார்களே?”
“யாரால் நடக்கமுடியுமோ அவர்களைக் கொண்டாவது நாம் எதிர்க்க வேண்டும்.”
“அவசியம் நாம் எதிர்க்க வேண்டும். ஆனால் மதுரா, உன்னிடம் நான் ஒரு விஷயம் சொல்லுகிறேன். நீ இப்பொழுது என்னோடு வர வேண்டாம். இந்த விஷயம் தெரிந்தவுடனேயே வாலிபர்களுடைய குடி மயக்கம் பாதி தெளிந்துவிடும். மற்றப் பாதி மயக்கம் தெளிவதற்குத் தயிரைக் கொடுக்க வேண்டும். உணர்ச்சி வரவர அவர்களை நீ அனுப்பிக் கொண்டே இரு.”
“பெண்கள்?”
“நம்முடைய குரு-குலப் பெண்களும் யுத்தத்தில் இறங்க வேண்டுமென, நான் தலைவன் என்ற முறையில் உத்தரவு போடுகிறேன். கைவிடப்பட்ட அவர்களுடைய புராதனப் பழக்கத்தை நாம் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.”
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேண்டும், இந்த, ஆனால், நாம், மதுரா, நான் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

