முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 269
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 269
பேரன் குப்லோக்கானின் காலத்திலேயே அவர்கள் தங்களை ஸமனியர்களின் சிஷ்யர்கள் என்று கூறிவந்தார்கள். இதுமட்டுமல்ல, செங்கிஸ்கானின் காலத்திலேயே அவனுடைய சேனையில் அநேக ஸமனியச் சேனைத் தலைவர்கள் இருந்தார்கள். புகாரா, சமர்கந்த், பலக் முதலிய இஸ்லாமிய நகரங்களையும், இஸ்லாமிய நாகரிகங்களின் கேந்திர ஸ்தானங்களையும், அவர்கள் தேடித்தேடி அழித்தார்கள். சாதாரணக் குடும்பத்தினர் என்று வேற்றுமை கூடப் பார்க்காமல் அடிமைகளாக ஆக்கிக் கொண்டார்கள். குழந்தைகளைக் கருணையின்றிக் கொன்று குவித்தார்கள். இந்தக் கொடுமைகளையெல்லாம் தூண்டி விட்டவர்கள் அந்த ஸமனிய மங்கோலியர்கள்தான். அரேபியர்கள் எங்கள் மடங்களை இடித்தார்கள், எங்கள் நகரங்களை அழித்தார்கள், குழந்தைகளைக் கொன்றார்கள். அதற்குப் பழி வாங்க வேண்டும் என்று தூண்டி விட்டார்கள் இந்த ஸமனியர்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மங்கோலியர்கள் இந்த ஸமனியர்களோடு (பௌத்தர்களோடு) சேர்ந்து கொண்டு ஹிந்துக்களைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தால், இஸ்லாத்தின் கதி என்ன ஆகியிருக்கும்?”
“சர்வ நாசமாயிருக்கும் ஜஹாம்பனாக்!”
“ஆகவே, நாம் மணற் பரப்பின் மீது நமது ராஜ்யத்தின் அஸ்திவாரத்தை அமைக்கக் கூடாது. அடிமை அரசர்களை நாம் காப்பியடிக்கக் கூடாது.”
இதுவரை மௌனமாக இருந்த பிரதம மந்திரி இப்பொழுது வாய் திறந்தார்.
“ஆனால் அரசர்க்கு அரசே கிராமத் தலைவர்களின் பலத்தை நாம் குறைத்து விட்டால், ஆட்சியின் கரங்கள் அந்தக் கிராமம் வரை எப்படி நீளும்?”
“பட்டுடை உடுத்தி குதிரைச் சவாரி செய்யும் இந்தக் கிராமத்தலைவர்கள் இல்லாத காலத்தில், வேலைகள் எப்படி நடந்தன?”
“நான் அதை ஆராயவில்லை.”
“நான் ஆராய்ந்திருக்கிறேன். அரசர்கள் தங்களைக் கொள்ளைக்காரர்களாகக் கருதிய காலத்தில்தான் கொள்ளைக்காரர்களை நிர்வாகிகளாக நியமித்தார்கள். இந்த மாதிரி நடப்பது இயற்கையே. அதற்கு முன்னால், ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படும் சண்டைத் தகராறு, அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது முதலிய எல்லாக் காரியங்களையும் அந்தப் பஞ்சாயத்தே நிர்வகித்து வந்தது. அரசனுக்கு, கிராமத்தின் தனிப்பட்ட நபரோடு எவ்விதத் தொடர்பும் கிடையாது. அவன் பஞ்சாயத்துக்களோடுதான் தொடர்பு கொண்டிருந்தான். தனக்கும் வரி செலுத்தும் விவசாயிக்கும் இடையே இணைப்பு, ஸ்தாபனமாக இந்தப் பஞ்சாயத்து இருந்து வருவதாகக் கருதினான்.”
“அப்படியானால் ஜஹாம்பனாக்! நூறு வருடங்களுக்கு முன்னால் இறந்து விட்ட பஞ்சாயத்துக்களை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.”
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 267 | 268 | 269 | 270 | 271 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாம், இந்த, என்று - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

