வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 21
கொண்டு ஓட்டமும் நடையுமாகத் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். இப்பொழுது, தாய், இடையிடையே கூர்ந்து கூர்ந்து பார்த்துக்கொண்டும், காது கொடுத்துக் கேட்டுக் கொண்டும் யாவருக்கும் பின்னேயும், மற்றவர்கள் முன்னுமாக நடக்கின்றனர். இன்று பனியில்லாததால், நிலவின் ஒளியிலே இவர்கள் பாதை தெரிந்து வேகமாக நடக்க முடிகிறது. இவர்களுடைய குகை இன்னும் அரை மைல் தூரங்கூட இராது; இவ்வளவில் அந்தத் துஷ்ட மிருகங்கள், ஓநாய்கள் திரும்பவும் இவர்களை வளைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டன. இவர்களும் தங்கள் சுமையை இறக்கி வைத்து ஆயுதங்களைத் தயார் செய்து பல அம்புகளைக் குறிவைத்து ஏவினார்கள். ஓயாமல் மிகவும் வேகமாக வளைய வந்து கொண்டிருக்கும் ஓநாய்களில் ஒன்றைக்கூட இவர்களுடைய அம்புகள் தொடவில்லை. இரு கட்சிக்கும் பலமான போராட்டம் நடக்கிறது. ஆம்! வாழ்க்கைப் போராட்டம் அல்லவா? இந்த நேரத்தில் எப்படியோ நான்கு ஓநாய்கள் ஒரு மொத்தமாகப் பதினாறு வயதுள்ள மங்கை மீது பாய்ந்துவிட்டன. பக்கத்தில் நின்ற தாய் தன்னுடைய ஈட்டியால்-முனையுள்ள கம்பால் ஓர் ஓநாயைக் குத்தி விழுத்தாட்டினாள். ஆனால் பாக்கி மூன்றும் தாங்கள் பாய்ந்திருந்த மங்கையின் தொடையில் பெரிய காயத்தை உண்டாக்கி விட்டன.
அவள் பூமியில் சாய்ந்ததுதான் தாமதம்; அவளுடைய வயிற்றைக் கடித்துக் குடலையும் வெளியே இழுத்துவிட்டன. எல்லோருடைய கவனமும் இவளைக் காப்பாற்றுவதில் முனைந்திருக்கும் போது மற்றும் மூன்று ஓநாய்கள் தருணம் பார்த்து, இருபத்துநான்கு வயதுள்ள ஆடவனின் மீதும் பாய்ந்து பூமியின் மீது சாய்ந்துவிட்ட அவனுடைய சரீரத்தில் பல காயங்களை உண்டு பண்ணிவிட்டன. அவனுடைய வயிற்றையும் கிழித்துவிட்டன. இப்போது எல்லோருடைய கவனமும் இந்தப் பக்கம் திரும்பியது. அந்தப் பக்கமும் முன்னே கீழே தள்ளப்பட்டு குடல் சரிந்து கிடக்கும் பதினாறு வயதுப் பெண்ணின் சரீரத்தை அந்த ஓநாய்கள் இன்னும் கொஞ்ச தூரம் இழுத்துக் கொண்டு சென்று தின்ன ஆரம்பித்து விட்டன. இந்தச் சமயத்தில், இவர்களில் யாரோ ஓர் ஆள் பெரியவளால் குத்தப்பட்டு விழுந்து கிடக்கும் ஓநாயின் வாயில் தடியைச் செலுத்த, இன்னொருவன் அதன் முன்னங்கால்களைப் பிடித்திழுக்க, மற்றவர்கள் அதன் சரீரத்திலிருந்து பெருகியோடும் ரத்தத்தைக் குடிக்க ஆரம்பித்தனர். தாய் அதனுடைய தொண்டையின் நரம்பை வெட்டி இவர்களுக்கு உதவி செய்தாள். இந்தப் போராட்டமும், கொலையும், புசிப்பும் சில நிமிஷங்களில் நடந்திருக்கின்றன. ஓநாயின் ரத்தத்தைக் குடிப்பதில் முனைந்திருக்கும் இந்த மனிதக் கூட்டத்துக்குப் பதினாறு வயது மங்கையின் சரீரத்தைப் பூராவும் தின்ற பின்னே அந்த ஓநாய்கள் தங்களைத் தாக்க ஆரம்பிக்கும் என்று தெரியுமாதலால் ஆவியை விட்டுக் கொண்டிருக்கும் ஆடவனையும் அங்கே போட்டுவிட்டு தங்களுடைய வேட்டைப் பொருள்களான மூன்று கரடிகள், ஓர் ஓநாய் இந்த நான்கையும் தூக்கிக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக அவர்கள் தங்கள் குகைக்கு வந்து சேர்ந்தனர். இங்கு குகையில் நெருப்பு ஜோதி மயமாக எரிந்து கொண்டிருக்கிறது. அக்கினியின் வெளிச்சத்திலேயே இரண்டு பெண்களும் எல்லாக் குழந்தைகளும் நித்திரை செய்கிறார்கள். காலடிச் சப்தம் கேட்ட கிழவி,” நிஷா...! வந்து விட்டீர்களா?” என்று கேட்டாள்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஓநாய்கள், இந்த, பதினாறு, வந்து, விட்டன, தாய், கொண்டு, தங்கள் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

