முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 191
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 191
இந்தியாவின் முதல் நாடக ஆசிரியன் அஸ்வகோஷ். இது கவிஞனுடைய முதல் முயற்சி என்றாலும், அவனுடைய புகழ்பெற்ற ‘ராஷ்டிர பாலன்’ ‘சாரிபுத்ரன்’ முதலிய நாடகங்களை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல.
மேடைத் தயாரிப்பிலும், ஒத்திகைகளிலும் முழுக் கவனத்தையும் செலுத்திய இளங்கவி, எத்தனையோ நாள் உணவு உறக்கத்தையும் மறந்திருந்தான். அந்த ஓய்வு ஒழிவற்ற நாட்களை, அவன் தன் வாழ்க்கையிலே மிக இனிமையான காலம் என்று கருதினான். நாள்தோறும் பல மணி நேரம் பிரபாவும் அவனும் நாடகத் தயாரிப்புகளிலே ஈடுபட்டிருப்பார்கள். நீச்சுப் போட்டி அன்று அவர்கள் இதயத்தில் ஊன்றப்பட்ட காதல் விதை, இப்பொழுது முளைவிட்டுத் தளிர்க்க ஆரம்பித்தது. கிரேக்க வாலிபர்களும் யுவதிகளும். அஸ்வகோஷைத் தங்களுள் ஒருவனாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். ஆகையால் அந்தக் காதலைத்தூண்டி வளர்க்கத் துணை புரிவது தங்கள் பாக்கியம் என்று கருதினார்கள். ஒரு நாள் நீண்ட நேரம் திரையிலே சித்திரக் கோலை ஓடவிட்டுக் கொண்டிருந்த
அஸ்வகோஷ் களைத்துப்போய், நாடக சாலையின் பக்கத்திலே அமைந்துள்ள பூந்தோட்டத்திலே போய் அமர்ந்தான். அந்தச் சமயத்தில் அங்கு வந்த பிரபா தனக்கே சொந்தமான இனிய குரலிலே,
“கவிஞரே! நீங்கள் எதை வைத்துக் கொண்டு ஊர்வசி வியோகக் கவிதையை இயற்றினீர்கள்?”
“ஊர்வசி-புரூரவாவின் கதையை வைத்துக்கொண்டுதான்.”
“இந்தக் கதை எனக்குத் தெரியும். ஆனால் ஊர்வசியை ‘அப்ஸரா’ என்று அழைத்தாயே!”
“ஊர்வசி உண்மையிலேயே அப்ஸராதான்.”
“அப்படியானால் புரூரவா அவளைப் பிரிந்து மலையிலும், காட்டிலும், நீர் ஓடையிலும், குளத்திலும், சோலையிலும் தேடுவதாக வருணித்திருக்கிறாயே!”
“அந்த நிலைமையிலே, புரூரவா அப்படிச் செய்வது இயற்கையே.”
“ஊர்வசி வியோகத்தின் பாடகர் கொடி வீட்டிலிருந்து அதைப் பாடும் பொழுது, தனது கீதத்திற்குத் துணையாக வீணை ஒலியை இணைத்ததைப் போல், கீதத்தின் கருத்தோடு தனது கண்ணீரையும் இணைந்தோடச் செய்யக் காரணம் என்ன?”
“பாடகனும் நடிகனும் தன்னை மறந்து கருத்திலே ஈடுபட்டுவிட வேண்டும், பிரபா.”
“இல்லை; நீ என்னிடம் உண்மையைத் தெளிவாகச் சொல்ல
விரும்பவில்லை.”
“நீ என்ன நினைக்கிறாய்?”
“நீ பழைய ஊர்வசி வியோகக் கதை பற்றிப் பாடவில்லை என்று நான் கருதுகிறேன்.”
“அப்புறம்... மேலே...”
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 189 | 190 | 191 | 192 | 193 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, “ஊர்வசி - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

